Monday, December 31, 2012

2012-ல் இவர்கள் இப்படிச் சொன்னார்கள்!



''பல முறை தீவிர முயற்சிகள் எடுத்தும் துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறவில்லை.''
 - மன்மோகன் சிங்
''ஓர் எழுத்தாளரின் நூல்கள் தாக்கப்பட்டால், ஒரு சமுதாயத்தின் பண்பாடு அழிக்கப்படுகிறது என்று அர்த்தம். ஓர் எழுத்தாளர் தாக்கப்பட்டால், ஒரு வரலாறு அழிக்கப்படுகிறது என்று பொருள்.''
- நீதிபதி சந்துரு
''என்னுடைய மனைவிகள் இருவரும் என்னை, 'ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்... ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார்கள். என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை.''
- கருணாநிதி
''மனிதர்கள் நல்லவர்களாக இருந்தாலே போதும். ஆனால், இப்போது மக்களே ஊழல்வாதிகளாக மாறிவருகின்றனர். அரசியல்வாதிகளைப்பற்றி நான் பேசவில்லை; அவர்களைத் திருத்த முடியாது.''
-  நீதிபதி ஜோதிமணி
'’தி.மு.க. தலைவர் பதவியைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்வேன்.''
- மு.க.அழகிரி
''ஆண்கள், 'செக்ஸியாக இருக்கிறீர் கள்’ என்று கூறினால், பெண்கள் அதைப் பெரிதுபடுத்த வேண்டியது இல்லை. 'அழகாக இருக்கிறீர்கள்’ என்பதைத்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள்.''
- மம்தா சர்மா, தேசிய மகளிர் ஆணையத் தலைவி.
''நானும் மற்ற மூன்று விஞ்ஞானி களும் அரசுப் பதவிகள் எதுவும் வகிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்த பின் விளக்கம் கொடுக்க மத்திய அரசு சந்தர்ப்பம் அளிப்பது என்பது, ஒருவரைத் தூக்கிலிட்ட பின் அவரிடம் கருத்துக் கேட்பதுபோல் உள்ளது.''
- மாதவன் நாயர்
''தேவைக்கு அதிகமான தலைவர்கள் இருக்கிறார்கள். அதுதான் எங்களுக்கு உள்ள பிரச்னை.''
- சோனியா காந்தி
''தி.மு.க. முடிந்துபோன கட்சி. அ.தி.மு.க. திரும்ப வராது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. கம்யூனிஸ்ட் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. விஜயகாந்த் தள்ளாடி வருவார்.''
- அன்புமணி
''லிபிய அதிபர் கடாபியைப் போல மக்கள் நடுரோட்டில் என்னைக் கொல்ல மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலை உருவாக நான் இடம் அளிக்க மாட்டேன்.''
-  ராஜபக்ஷே
''நான் பிரபுதேவாவுக்கு உண்மையாக, விசுவாசமாக இருந்தேன். ஆனால், அவர் இல்லை.''
- நயன்தாரா  
''வெளிநாடுகளில் முடக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்தால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 2.5 லட்சம் ரூபாய் கொடுக்கலாம்.''
- முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானி
''தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைத் திரும்ப அழைக்கும் உரிமை, நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது.''
-  தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி
''அதிகாலையில் நான் தும்மினாலோ, இருமினாலோ உடனே எழுந்து வந்து என்னைப் பார்ப்பார் என் தாய். சில சமயம் நான் சிறு குழந்தைபோல் அழுவேன். அப்போது அவர் என்னைத் தேற்றுவார். என்னைவிட மனவலிமை மிக்கவர் என் தாய்.''
- யுவராஜ்சிங்
''சட்டம்-ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் இன்றி, ரத்தம் சிந்தாமல் வெற்றிகரமாகக் கூடங்குளம் அணுமின் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.''
- ஜெயலலிதா
''தமிழகத்துக்கு, ஒரு சொட்டு காவிரி நீர்கூட விடவில்லை. கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து, தண்ணீர் அதிகரிக்கும் வரை தமிழகத்துக்குத் தண்ணீர் விடும் திட்டமே இல்லை.''
-  கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா
''மது விற்பனையின் மூலம் மக்களுக்குச் சிறுநீரகம், ஈரல் பாதிக்கப்படுவதற்கு மறைமுகக் காரணமாக இருக்கிறது 'டாஸ்மாக்’ நிறுவனம்.''
- நீதிபதி சந்துரு
''சர்வதேச அளவில்கூட, ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்குச் செல்லும் நதி நீரைத் தடுக்க உரிமை இல்லை. ஆனால், ஒரே நாட்டில் உள்ள மாநிலங் களுக்குள் நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் இத்தனை பிரச்னைகள்.''
-  வைகோ
''என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய ஆதீனங்கள், அவர்களுடைய அறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ரகசிய கேமராக்களை வைக்கத் தயாரா?''
- நித்தியானந்தா
''ராவணன் விடுதலை ஆகும்போது, ராசா விடுதலை ஆகக் கூடாதா?''
- கருணாநிதி
''என்னைப் போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்ட மிட்டு உள்ளனர்.''
- ம.நடராசன்
''நமது உலகில் அமைதி என்பது இன்னும் அடைய முடியாத குறிக்கோளாகவே உள்ளது.''
-   ஆங் சாங் சூ கி
''சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக இருந்தாலும், திறமை உள்ள இளைஞர்கள் தொடர்ந்து அமெரிக்கா வில் தங்கலாம்.''
- பாரக் ஒபாமா
''நான் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சோனியா காந்தியைப் பிரதமர்ஆக்கத் தயாராகவே இருந்தேன்.''
- அப்துல் கலாம்
''முள்ளிவாய்க்காலில் தாக்குதல்நடத்து வதில் ராணுவத்துக்குத் தயக்கம் இருந்தது. பல்லாயிரக்கணக்கானோர் அங்கு இருந்தார்கள். குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்ச மாட்டார்கள். அதிபர் ராஜபக்ஷேதான், 'எந்த சர்வதேச நெருக்கடிக்கும் பயப்படாதீர்கள்; தாக்குதல் நடத்துங்கள்’ என்று உத் வேகம் கொடுத்தார். அதனால்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.''
-  இலங்கை தரைப் படைத் தளபதி ஜெகத் ஜெயசூரியா.
''கிரிக்கெட்டில் எனது வருங்காலம்குறித்து நான் எடுக்கும் முடிவில் யாரும் தலையிட முடியாது. அதுகுறித்து நான்தான் முடிவு எடுக்க வேண்டும்.''
- சச்சின் டெண்டுல்கர்
''தமிழக முதல்வர் அண்ணா சாலையில் குப்பை இருந்தால்கூட, அதை அகற்ற பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார். 'என்னால் ஆட்சி செய்ய முடியவில்லை’ என்று கடிதம் எழுதுங்களேன்... அதற்கு உடனடியாகப் பதில் கிடைக்கும்.''
- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
''கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பங்கு ஆற்றப்போகிறேன். எப்போது என்பதை எனது 'பாஸ்’களான காங் கிரஸ் தலைவரும் பிரதமரும் முடிவு செய்வார்கள்.''
- ராகுல் காந்தி
''என்னைப் பிரதான எதிர்க் கட்சித் தலைவராக முதல்வரும் மதிக்கவில்லை; அமைச்சர்களும் மதிக்கவில்லை.''
- விஜயகாந்த்
''சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகள் மூலம், அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.''
- சகாயம் ஐ.ஏ.எஸ்.
''எத்தனை காலத்துக்கு, எத்தனை தடவை நாங்கள் உண்ணாவிரதம் இருப்பது?’
- அண்ணா ஹஜாரே
''போர் நடைபெற்ற நேரத்தில் நான் எதுவுமே செய்யவில்லை என்று என் மீது புகார்க் காண்டம் படிக்கும் கூட்டத்தில் உள்ளவர்களை நான் கேட்கிறேன்... 'நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு, இலங்கைத் தமிழர் களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே?’ ''
- கருணாநிதி
''ராகுல் காந்தி சர்வதேசத் தலைவர். இந்தியாவில் மட்டும் அல்ல; இத்தாலியில்கூட அவர் பிரதமர் ஆகலாம்.'' 
- நரேந்திர மோடி
''குடும்பத்துக்காக ஆட்சி நடத்திய கருணாநிதி அரசின் மின்வெட்டை மிஞ்சிவிட்டது... 'தமிழகம்தான் என் குடும்பம்’ என்று சொல்லி ஆட்சி நடத்தும் ஜெயலலிதா அரசின் மின்வெட்டு.''
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
''கழிப்பறை இல்லாத வீட்டுக்கு எந்தப் பெண்ணும் மணமகளாகச் செல்லக் கூடாது.''
- மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
''ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து அமைக்கும் கூடங்குளம் அணு உலையை ஆதரிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. ஆனால், இந்த விவகாரத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டேன் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன்.''
- வி.எஸ்.அச்சுதானந்தன்
''மீண்டும் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்காமல் ஓய மாட்டேன்.''
        - ஜெயலலிதா
''நான் டெங்குக் கொசுவைவிட ஆபத்தானவன். கடித்தால் தாங்க மாட்டீர்கள்.''
  - அரவிந்த் கெஜ்ரிவால்
''இளைஞர் அணி அமைப்பாளர் ஒருவரிடம் தலைவர், 'வயது என்ன?’ என்று கேட்க... அவர் '56’ என்று சொல்ல, தலைவர் என்னைப் பார்க்க, நான் இளைஞர் அணி தோழரைப் பார்க்க, இப்படிப்பட்ட சூழலில்தான் தலைவர் 'இளைஞர் அணிக்கு ஒரு வயது வரம்பு வைத்தால் என்ன?’ என்று கேட்டார்.''
- மு.க.ஸ்டாலின்
''எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. எங்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாமல், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும்.''
- மதுரை மத்திய சிறைக் கைதிகள்
''நான் கண்டக்டராக இருந்தபோது, நிறைய மது அருந்தியது உண்டு. திரையுலகுக்கு வந்த பின் அளவுக்கு அதிகமாக சிகரெட் பிடித்தேன். அதனால் வந்த வினைதான், எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து கிட்னியில் பிரச்னை ஏற்பட்டது. ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான்... தயவுசெய்து சிகரெட் பிடிக்காதீர்கள். அதை இன்றே, இப்போதே விட்டுவிடுங்கள்.''
- ரஜினிகாந்த்
''நான் டாக்டருக்குப் படித்ததில் இருந்து, டாக்டராக வேலை பார்த்ததில் இருந்து, வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பா.ம.க. தொடங் கிய பின்பு வரை நான் சாதிவெறியன் தான். நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால், உன் பெண்ணைக் கொடுக்கிறாயா என்று கேட்கிறார்கள்.'
- ராமதாஸ்

2012 டாப் 25 பரபரா


விகடன் டீம்
ஓவியங்கள் : கண்ணா
இருட்டுக்கடை அல்வா!
'1997-ல் மின்சாரக் கனவு... 2012-ல் மின்சாரமே கனவு’ என்று பப்ளிக்கை டெரர் கவிதை வாசிக்கவைத்தது பவர்கட். 'நான் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்று முழங்கிய ஜெயலலிதா 'பவர்’ வந்ததும், பவர்கட்டை மறந்துபோனார். 14 மணி நேரம் 16... 18 என எகிறிக்கொண்டே போக, அத்தனை பேரும் 'பவர் ஸ்டார்’களாகி கிறுக்குப் பிடித்துத் திரிந்தார்கள். ''மின்வெட்டுப் பிரச்னை இவ்வளவு சீரியஸாவா இருக்கு? யாருமே என்ட்ட சொல்லவே இல்ல...'' என்ற ஜெ-வின் ரியாக்ஷன் அதிபயங்கர ஷாக். ஆற்காட்டாரிடம் மன்னிப்புக் கேட்டு ஆங்காங்கே போஸ்டர் ஒட்டிய தமிழன், பவர்கட் ஜோக்குகள் படித்துச் சிரித்தது அவலச் சுவை. '25 மணி நேர மின்தடை’ என்று தமிழ்நாடு மின்சார வாரியத்தில் யாரோ ஆஃப் அடித்துவிட்டு அறிவிக்க, 'அடிடா அவனை’ என்று ஈ.பி. அலுவலகங்களைத் தாக்கி, மறியலில் அமர்ந்தார்கள் சிறு, குறு தொழிலாளர்கள். சீரியல்களுக்கு டி.ஆர்.பி. குறைந்ததில் இருந்து ஏகப்பட்ட தொழில் நசிவு வரை பிரச்னை எகிறி அடிக்க, 'மழை பெய்யும்போது மின் கம்பங்களுக்கு அருகே மக்கள் செல்ல வேண்டாம்!’ என்று மின் வாரியம் இருட்டுக்கடை அல்வா கிண்டியதில், கிறுக்குப் பிடித்தது தமிழகம்!
'முன்னாள்’ அஞ்சா நெஞ்சன்!
ஞ்சா நெஞ்சன்தான் இந்த வருடத்தின் பஞ்ச்சர் நெஞ்சன். 'இடப் பற்றாக்குறை’ என அழகிரியின் மதுரை எம்.பி. அலுவலகத்தை நெம்பி எடுத்தார்கள். 'நானும் வருவேன்... ஆட்டையக் கலைப்பேன்’ என்று ஸ்டாலின் நெல்லை வரை வந்து தொல்லை கொடுக்க, 'இளைஞர் அணிப் பதவி நியமனங்களில் என்னுடைய சிபாரிசுகளைக் கட்சி மேலிடம் ஏற்கவில்லை’ என்று கோனார் கடையில் இருந்து குரூப் மெசேஜ்கள் அனுப்பினார் அழகிரி. 'மலையைக் காணோம்!’ என்று மதுரை அலற, 'மகனைக் காணோம்!’ என்று அலறினார் அப்பா. பிரஸ்ஸைப் பார்த்தாலே பிரஷர் எகிறுபவர், 'துரையின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணைமுடியும் வரை அவரைக் கைதுசெய்யக் கூடாது!’ என 'டூ மினிட்ஸ் நூடுல்ஸ் பேட்டிகள்’ தட்டினார். துரையைத் தேடிபோலீஸ் நுரை கக்க, அழகிரிக்கு கருணாநிதி தினமும் 108 மிஸ்டு கால்கள் கொடுத்தார். போலீஸ், அமெரிக்க மருமகனுக்குச் சம்மன் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்ததில், ஆண்டர்சன் பந்துக்குப் பம்மும் சச்சின் மாதிரி ஆனார் கிரிகிரி. உள் கட்சிக் கொசுக்கடியில் சிக்கியது, பிரதமர் கொடுத்த விருந்துக்குப் போகாமல் அடடே 'டயட்’டில் இருந்தது, ஒப்பணக்கார வீதியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் போனது... என ஏகப்பட்ட பல்புகளுக்கு நடுவே, மகனுக்கு முன் ஜாமீன் கிடைத்தது மட்டுமே அண்ணனுக்கு இந்த வருட ஆறுதல்!
கொல வெறி கய்ஸ்!
ந்த வருடத்தின் 'கொல வெறி’ கிசுகிசு. '3’ என டைட்டில் வைத்ததில் இருந்தே டைட்டடித்தது பிரச்னை. மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த தனுஷ§க்கும் ஸ்ருதிக்கும் பத்திக்கிச்சு எனக் கலரடித்தன கவர் ஸ்டோரிகள். 'தனுஷ§ம் ஸ்ருதியும் பார்க்ல இருந்தாங்களாம்... ஐஸ்வர்யா காரை பார்க் பண்ணும்போது பார்த்துட்டாங்களாம்’ என சினிமா ரிப்போர்ட்டர்கள் பரபரப்பானார்கள். 'வலைபாயுதே’ குரூப் நெட்டில் கொட்டடித்தனர். ''தனுஷ§டன் எனக்குக் காதல் என்று வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்'' என்று சூடானார் ஸ்ருதி. இந்த மேட்டர்களால் '3’ படத்துக்குச் செலவில்லாமல் செம பப்ளி குட்டி. ''ஒரு இயக்குநரா அந்தக் காட்சி சரியா வந்திருந்தாலும், ஒரு மனைவியா அவங்க நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா கோபப்பட்டது உண்மைதான். மருமகளுக்கும் மகனுக்கும் அப்பப்போ சின்னச் சின்ன சண்டை வரும். அதுக்காக அவங்க பிரிஞ்சிட்டாங்கன்னு சொல்றதுலாம் டூ மச்!'' என்று 'பஞ்சாயத்து’ கஸ்தூரிராஜா வேறு பாலிடாயில் தெளிக்க, 'ஏய்ய்ய் கொமாரு... படம் ஃப்ளாப்புராஆஆஆ...’ என ரிசல்ட் வர, கொல வெறி தணிந்தது!
'ஃபுல்லா குடுத்துரு!’
ந்த வருடமும் டாஸ்மாக்தான் மாஸ் டைம்பாஸ். 'புத்தாண்டுக்கு 142 கோடி ரூபாய் மது விற்பனை... இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 கோடி ரூபாய் அதிகம். பொங்கலுக்கு 276 கோடி ரூபாய். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 35 கோடி ரூபாய் அதிகம்!’ என்று வருடம் முழுக்க 'வெற்றிக் கொடி கட்டு... லட்சியம் எட்டும் வரை எட்டு’ என அறிவித்துக்கொண்டே இருந்தது டாஸ்மாக் நிர்வாகம். 'பத்தலையே...’ என யோசித்த அரசு, 'அடுத்தது எலைட் பார்’ என்று அறிவிக்க, 'ட்ரீட் எங்க... ட்ரீட் எங்க...’ எனக் குதூகலம் ஆனார்கள் பிரேம்ஜிக்கள். சரக்கில் தண்ணீர் ஊற்றிக் கலப்பட சரக்கு விற்பதைத் தட்டிக்கேட்க விரும்பிய சில போராளிக் குடிமகன்கள் 'கலப்பட சரக்குக்குப் பதில் கள்ள நோட்டு’ என்று இருட்டில் ரவுண்டு கட்ட, அலறியடித்து டாஸ்மாக்கில் கள்ள நோட்டைக் கண்டுபிடிக்க தனிப் படைகளை நியமித்தார்கள். ராமதாஸில் இருந்து வைகோ வரை யார் என்ன சொன்னாலும் 'போங்க பாஸு...’ என லெஃப்ட் அடிக்கும் குடிமகன்களுக்கு ஓர் இடி செய்தி... நாடாளுமன்றத் தேர்தலில் பெண்கள் ஓட்டை அள்ள, 'மதுவிலக்கு’ அறிவிப்பு வரலாம் எனக் கிசுகிசுப்பு வர, 'அப்போ ஃபுல்லாக் குடுத்துரு...’ என எகிறியது விற்பனை!
மிஸ்டர் அந்தர்பல்டி!
ந்த வருடத்தின் 'சினேஏஏஏக் பாபு’, மத்திய அமைச்சர் நாராயணசாமி. ''15 நாள்ல அணு உலை செயல்படும்...'' என இவர் முதல் தடவை சொன்னபோது, நிஜமாகவே டெரராக இருந்தது. அப்புறம், 'அது போன மாசம்... இது இந்த மாசம்’ என அதையே இவர் பேச, 'ஓ... இவரு அவருல்ல..?’ எனக் காமெடிப் பீஸானார். 'கொம்பன் வர்றான்... கொம்பன் வர்றான்...’ என ஆன் தி வேயில் இவர் தட்டிய ஏர்போர்ட் பேட்டிகள் அத்தனையும் காமெடி க்ளிப்பிங்ஸ். ''விமானமே வந்து மோதினாலும் அணு உலை நொறுங்காது!'' என்று பேசிய சூட்டோடு, ''அணு மின் நிலையத்தில் விபத்துகள் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மத்திய அரசு 1,500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது'' என்று திகீர் திரி கொளுத்தினார். நாடாளு மன்றத்தில் இவர் வாதிட்ட சட்ட மசோதாவை எம்.பி. ஒருவர் பிடுங்கிக்கொண்டு ஓடியது குபீர் திகீர்! ''பேச்சைக் குறைத்துக்கொள்ளுங்கள்'' என்று கோர்ட்டே காட்டம் காட்டுகிற அளவுக்கு 'கீரிப்பிள்ளை’ காமெடி காட்டினார்!
அம்மம்மா..!
டிதம் தட்டுவதில் கருணாநிதி வைத்திருக்கும் கின்னஸ் ரெக்கார்டைக் கைப்பற்றக் கிளம்பினார் ஜெ. நதி நீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும், பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க வேண்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை, சிங்கள வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி கொடுப்பதை எதிர்த்து என அடுத்தடுத்து டெல்லிக்கு லெட்டர்கள் தட்டினார். வக்கீல்கள் ஷிஃப்ட் போட்டு வேலை செய்கிற அளவுக்குச் சகட்டுமேனிக்கு சகலர் மீதும் வழக்கு மழை பொழிந்தார். ஒன்றரை வருடத்தில் ஐந்து முறை அமைச்சரவையைக் கலைத்துப் போட்டு கபடி விளையாடினார். 'ஜெ-வின் மனசாட்சி’ என்று வர்ணிக்கப்பட்ட செங்கோட்டையன் முகத்திலேயே புரட்சித் தலைவி பூரான் விட, பன்னீர் பயங்கரமாகப் பம்மினார். உச்சகட்டமாக தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, சபாநாயகரையே நீக்கி அதிரடித்தார் ஜெ. அத்தனை அமைச்சர் களும் 'தாயில்லாமல் நானில்லை’ என்ற ரிங்டோன்களுடன் சாம்பார் வாளி தூக்கித் திரிகிறார்கள். ''அண்ணா வளைவை இடிப்பதுகுறித்து யாரும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை'' என்று அப்புராணி அறிக்கைவிட்டவர், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மகா மெகா இரட்டை இலையை வைத்தபிறகு, 'அது குதிரையின் சிறகுகள்’ என்று பயாலஜியையே மாற்றி எழுதினார்!
திராணி மேளா!
ந்த ஆண்டும் பொளந்தது இடைத்தேர்தல் காமெடிகள். ''சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திராணி இருந்தால் எங்களை ஜெயித்துப் பாருங்கள்'' என்று சட்டமன்றத்தில் சவால்விட்டார் ஜெ. மொத்த அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் அங்கப்பிரதட்சணம் உருண்டார்கள். சாயங்காலம் தூங்கி எழுந்தவர் மாதிரியே தேர்தலை எதிர்கொண்டார் கருணாநிதி. பிரசாரத்தில் பேசிய விஜயகாந்த், ''நான் மக்கள் பணிகளைப் பார்ப்பதற்காக சினிமாவில்கூட நடிப்பது இல்லை என்பது தெரியுமா?'' என்று கமா போட்டவர், ''எனக்குப் பதிலாக என் மகனை நடிக்க அனுப்புகிறேன்''! என ஃபுல்ஸ்டாப் வைக்க... அரண்டுபோன தொகுதி மக்கள், அ.தி.மு.க-வுக்கு அமோக ஆதரவளித்து தே.மு.தி.க. டெபாசிட்டைப் பறித்தார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. மரணம் அடைய, புதுக்கோட்டையில் இடைத்தேர்தல். தா.பாண்டியனைக் கேட்டிலேயே வெயிட்டிங் போட்டு, அ.தி.மு.க. தன் வேட்பாளரை அறிவித்தது அதிர்ச்சிக் காமெடி. ''நாங்க ஆட்டத்துக்கு வரல...'' என கலைஞர் பேக்கடிக்க, ''புறநானூற்றிலே... புறமுதுகிலே...'' என வைகோவும் எஸ்கேப். ''ஏய்ய்ய்... தப்பு... நான் உப்பு வித்தே தீருவேன். ஆங்...'' என அடைமழையில் கேப்டன் களம் இறங்கினார். அமைச்சர்களின் அட்ராஸிட்டி எகிற, ''பப்ளிக்... பப்ளிக்...'' என ஜெயாவே சிக்னல் காட்டினார். அ.தி.மு.க. ஜெயிக்க, தே.மு.தி.க-வுக்கு டெபாசிட் கிடைத்தது ஆறுதல் காமெடி!
கரகர ராஜா!
பாரதிராஜா இந்த வருஷத்தின் கரகர ராஜா. பெப்ஸி ஊதியப் பிரச்னையில், ''என் படத்தை எப்படி எடுக்குறதுனு எனக்குத் தெரியும்!'' என்று தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக ஆணியடித்தார். ''நீங்க வரலைன்னா... ஐ பெர்சனலி டூ தட் அன்னக்கொடி... ஆன் மை ஓன் பவர்'' எனத் தன்னிச்சையாக தேனிப் பக்கம் போய் ஆடு மேய்த்தார். ஒரு பக்கம் ஆடுகள் மிரள, இன்னொரு பக்கம் பெப்ஸி தொழிலாளிகள் ஷூட்டிங்குக்கு வராமல் போக, கைகளால் ஆங்கிள் பிடித்துத் தேவுடு காத்தார். தா.பாண்டியனின் பிறந்த நாள் விழா மேடையில் வைகோவை வைத்துக்கொண்டு, ''திராவிடம் பேசிப் பேசி தமிழ்நாட்டையே அழிச்சிட்டாங்க... ஈழத்தையும் அழிச்சிட்டாங்க...'' என பாரதிராஜா கிழக்கே போகும் கிறுகிறு ரயில் ஓட்ட, ''வரலாறு தெரியாமல் பேச வேண்டாம்'' என்று பாரதிராஜாவுக்கு பவுன்சர் வீசினார் வைகோ. இது போக 'அ கொவும் கொ வீயும்’ படத்துக்கு 'அவன் நடிகன்யா’ என்று முதலில் பார்த்திபனை புக் பண்ணினார். சொல்லாமல் கொள்ளாமல் அவரைத் தூக்கிவிட்டு, 'அவன் என் தம்பிய்யா’ என்று அமீருக்குத் தாடியெடுத்தார். அப்புறம் அவரையும் நீக்கி, 'அவன் என் மகன்யா’ என்று கடைசியில் மனோஜுக்கு மேக்கப் போட, 'ஆக்ச்சுவலா அந்தக் கட்டுவிரியனே நீங்கதான்...’ எனப் புலம்பியது பாதிக்கப்பட்ட கும்பல்!
மூன்று கில்லாடிகள்!
ந்த வருடத்தின் செம காமெடி சேஸிங்! திடீரென அ.தி.மு.க-வை விட்டு சசிகலா நீக்கப்பட்டதாக அம்மா அறிவிக்க, 'உய்ய்ய்... உய்ய்ய்... உய்ய்ய்...’ என நாலு ஷோவுக்கு ரெடியானது தமிழகம். முதல் ஷோவாக, ராவணனுக்கு லாடம் கட்டியது போலீஸ். 'போடு தில்லாலே ஆடு தில்லாலே’ என ஜாலியானார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அடுத்தடுத்து வழக்குகள் மண்ட, 'சிக்குனான்யா சீஃப்’ என ர.ர-க்கள் ராவாக அடித்தார்கள். அடுத்து பெசன்ட் நகர் பெரியவர் நடராஜனை, சென்ட் அடிப்பதற்கு முன் தூக்கியது போலீஸ். நில அபகரிப்புப் புகாரில் அடுத்த குத்து விழுந்தது திவாகரனுக்கு. போலீஸ் விரட்ட, காரை எடுத்துக்கொண்டு தனியே திவா ரிஷிகேஷ் வரை போக, 'தப்பிக்கிறாராமாம்’ எனப் பொளந்தன காமெடி ஸ்கூப்புகள்.  அம்மா 'பேக்அப்’ சொல்ல, சசிகலா மீண்டும் தோட்டத்துக்குள் வர... கதம்... சுபம்!
''நான் கடுப்பு எம்.ஜி.ஆர்... ஆங்!''
'ரூபம்... ரூபம்... ரூபம்...’ என விஜயகாந்த் விஸ்வரூபம் காட்டியதுதான் இந்த வருடத்தின் சீரியஸ் காமெடி.
'முல்லைப் பெரியாறு, பாலாறு தடுப்பணை என தமிழகத்தின் எந்தப் பிரச்னையையும் தீர்க்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக’ விஜயகாந்த் அறிவிக்க, 'தலைவர் தல-தளபதி சலூன் நடத்தப்போயிருவாரோ?’ என ஜெர்க் ஆனார்கள் தொண்டர்கள். ''இனி சுட்டுப்போட்டாலும் யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன்'' என்று காலையில் கண் சிவந்தவர், ''தேவைப்பட்டால், தி.மு.க-வோடு கூட்டணிவைப்பேன்!'' என்று சாயங்காலமே சைடு வாங்கினார். சட்டசபையில் திடுதிப்பென்று ஆளும் கட்சி ஆட்களைப் பார்த்து கேப்டன் நாக்கைத் துருத்தி 10 நாள் சஸ்பெண்ட் ஆக, நெட்டில் கேப்டன் காமெடிகள் ஹிட்ஸ் அள்ளியது. தே.மு.தி.கழக எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் அடுத்தடுத்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க, கேப்டன் ஷிப்பில் விழுந்தது கெக்கேபிக்கே ஓட்டை. ''துரோகிங்க போனாப் போறாங்க... கோழிங்க என்ன அம்மான்னா கத்துது... கொக்கொக்கொக்னுதான கத்துது...'' என விஜி சளைக்காமல் பவுடர் அடிக்க, பிரேமலதாவும் பண்ருட்டியாரும் ஃபுல் க்ளாப்ஸிலேயே இருந்தார்கள். திடீரென்று விஜயகாந்தே ஜெ-வைப் பார்க்க நேரம் கேட்டுக் கடிதம் கொடுக்க, 'கலாய்ச்சுட்டாராமாம்!’ என ஜாலியானார்கள் தமிழர்கள். உச்சகட்டமாக ஏர்போர்ட்டில், 'நீயா எனக்குச் சம்பளம் கொடுக்குற?’ என்று நிருபரின் கண்ணைக் குத்த, 'விஜயகாந்துக்குச் சம்பளம் கொடுக்கும் போராட்டம்’ என பத்திரிகையாளர்கள் கூட... ஒரே காமெடி சடுகுடு!
ஆக்டரா... டாக்டரா?
ராமதாஸ்தான் இந்த வருடத்தின் சூப்பர் டிங்கர். டாஸ்மாக்குக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தைத் தலைவர் அறிவிக்க, ட்ரீட் வைத்து ஆர்ப்பரித்தார்கள் தொண்டர் கள். ''இனிமே திராவிடக் கட்சிகளோட கூட்டணியே கிடையாது. கோ.க.மணி மேல சத்தியம்...'' எனப் பேட்டிகள் தட்ட, ''நாம் ரத்தம் கக்கப்போறது கன்ஃபர்ம்...'' என கிலியானார் கோ.க. ''சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் ஓய்வு  பெறுவதால் ஏற்படும் காலி இடங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும்'' என்று ஜாதிமல்லி கட்டியவர், அடுத்தடுத்த அழும்புகளில் இறங்கினார். மகாபலிபுரத்தில், ''எவன் கலப்புத் திருமணம் பண்ணாலும் வெட்டுவேன்...'' என்கிறரீதியில் பா.ம.க-வின் 'பொன்னம்பலம்’ காடுவெட்டி குரு பேச... ''வாரே வா... பகுத் அச்சா'' எனத் தொடை தட்டினார் டாக்டர். தர்மபுரியில் ஒரு காதல் ஜோடிக்காக ஊரே எரிக்கப்பட்டது. ''நான் சாதி வெறியன்!'', ''கலப்புத் திருமணங்களை ஆதரிக்கக் கூடாது!'' என்று அய்யா போட்ட ஒவ்வொன்றும் சமூக ஒற்றுமைக்கான வேட்டுகள். ''விடுதலைச் சிறுத்தைகள் ஒரு ரௌடிக் கட்சி'' என அறிக்கைவிட்டு, திருமாவுக்கும் தீப்பொறி திருமுகம் ஆனார். ''திராவிடக் கட்சிகளை அழிக்கவே நான் பிறந்துள்ளேன். இனி, நான் எடுக்கப்போவது புதிய அவதாரம்!'' என்று அய்யா பஞ்ச் அடிக்க, ''இவர் டாக்டர் தாத்தாவா... ஆக்டர் தாத்தாவா..?'' என இமான் அண்ணாச்சி வரைக்கும் காமெடி எகிறியது!
அரியர் தோழர்!
கூடங்குளம் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, ''அணு உலை திறக்க வேண்டும்'' என்று தா.பா. சொம்படிக்க, ''போப்பா'' எனப் பொங்கினார்கள் போராளிகள். ''போராடினால் மட்டும் மின்சாரம் வந்துவிடுமா? போராட்டத்தால் என்ன லாபம்?' என்று புதுப் பித்தாந்தம் வாசித்தவர், ''சிறுவாணியில் புது அணையைக் கட்டும் கேரளாவைக் கண்டித்தும், ஐரோப்பாவுக்கு 56 ஆயிரம் கோடி நிதி கொடுக்கப்போவதாகச் சொன்ன பிரதமர் மற்றும் நிதி அமைச்சரைக் கண்டித்தும் ஜனாதிபதி தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது!'' என்று ஒரு சைஸாகக் குழப்பி அடித்துக் குழம்பு ஊற்றினார். ஓசூரில் பெரியார் தி.க-வின் மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி கொலை வழக்கில், தன் கட்சி தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கைதுசெய்யப்பட, ''அய்யய்யோ... ராம்ஸ் ரொம்ப நல்லவருங்க'' என தா.பா. சர்ட்டிஃபிகேட் கொடுத்தது க்ரைம் காமெடி. அப்படியே 'ஸ்டார்ட் மீஜிக்’ என இந்திய கம்யூனிஸ்ட் வரலாற்றில் முதல்முறையாகத் தனது 80-வது பிறந்த நாளை பிளிறலாகக் கொண்டாடினார். ஜெயலலிதா வீட்டுக்கே போய் வாழ்த்த, 'அங்க நான் கால்ல்லி...’ எனப் பரவசமாகிப் பம்மினார். கசாப் தூக்கிலிடப்பட்டபோது, ''ஆமாம், கசாப் ரகசியமாகத்தானே இந்தியா வந்தான். ரகசியமாகத் தூக்கிலிட்டதில் என்ன தவறு?'' என்று லாஜிக் சொல்ல, ஒபாமாவுக்கே கை கால் நடுங்கியது. அரியர் வைத்து அவமானப்படுத்தினாலும் 'அம்மாவே சரணம்’ என்று வருடம் முழுக்க போயஸிலேயே சரணடைந்துகிடந்தார்!
மண்டபம் நிரப்புப் போராட்டம்!
''பாத்துக்க ஜெயிலுக்குப் போறோம்... நாங்களும் ரௌடிதான் நாங்களும் ரௌடிதான்...'' என தி.மு.க. அறிவித்த சிறை நிரப்பும் போராட்டம் இந்த ஆண்டின் காமெடி டாப் டென்னில் உண்டு. நில அபகரிப்பு வழக்குகளில் கே.என்.நேரு, என்.கே.கே.பி.ராஜா என கழகப் புள்ளிகள் பலரையும் பாத்ரூம் போவதற்கு முன் தூக்கியது போலீஸ். உடன்பிறப்புக்கள் டாஸ்மாக்குகளில் ஒளிய, கண் ஆபரேஷன் பண்ணி கால் நீட்டியிருந்தார் ஸ்டாலின். 'கனிமொழி சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போகிறார்’ என செய்தி பரவ, 'கண்ணாவது ஒண்ணாவது’ எனக் களத்துக்கு எகிறி வந்தார் தளபதி. 'நடுவுல கொஞ்சம் அழகிரியைக் காணோம்’ என்று தொண்டர்களைத் தேடவைத்து, சுவிட்ச் ஆஃப் ஆனார் அழகிரி!
''போடுறா... கொல்றா... ஒதரா!''  
2012-ன் அன்னபோஸ்ட் அப்பாடக்கர்கள். 'மசாஜ் எடுத்தோமா, ஞானப்பால் கொடுத்தோமா’ என அமைதியாக வாழ்ந்த மதுரை ஆதீனத்தின் பேட்டையில் கும்மிஅடித்தது கூடா நட்பு. திடுதிப்பென்று நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமிக்க, 'போடுறா... போடுறா’ எனக் குஜாலானது தமிழகம். ''கனவுல வந்து சிவன் சொன்னாப்ல...'' என அதற்கு 'ஜலக் பொலக்’ விளக்கம் வேறு கொடுக்க, ''கொல்றா... கொல்றா...'' எனக் கொந்தளித்தது தமிழகம். நித்தி பேசுவதற்கெல்லாம், ''தம்பி கருத்தாப் பேசுறாப்ல...'' என ஆதீனம் சோப்படிக்க, ''ஒதரா... ஒதரா...'' என உதறியது தமிழகம். ''ஆயிரம் சந்நியாசிகளைப் பலி கொடுத்தாவது ஆதீனத்தின் சொத்துக்களை மீட்பேன்'' என நித்தி கொமட்டைத் தூக்க, ''தம்பி... ஆர்ம்ஸை எறக்கு... ஆர்ம்ஸை எறக்கு...'' என மிரண்டார் சீனியர். கவலையே இல்லாமல் நித்தி 'ரிங்கா ரிங்கா’ டூரடிக்க, நித்தியின் சூப் பாய்ஸின் கண்காணிப்பில் அச்சப் பேட்டிகள் தட்டினார் அருணகிரி. ''தமிழக அரசுக்கு மதுரை ஆதீனத்தைக் கையகப்படுத்தும் எண்ணம் உண்டு'' என்று அரசுத் தரப்பு வக்கீல் சொன்னதும், ''சாத்தானே அப்பாலே போ'' என நித்தியை டிஸ்மிஸ்ஸினார் ஆதி. அப்படியே வைஷ்ணவி கல்யாணத்துக்குப் போய் அஞ்சு லட்சம் மொய் செய்து, விகடனுக்கு ஜாலி பேட்டி தட்டி செல்ஃப் சேவிங்கிலேயே இருந்தார்!
ரொமான்ஸ் ரௌடி!
சிம்பு போய் பிரபுதேவா வந்தது போன வருஷம். பிரபுவும் போனது இந்த வருஷம். 'ராமராஜ்யம்’தான் கடைசிப் படம் என ஃபேர்வலே கொண்டாடிவிட்டார் நயன். ''ஏழரை மணிக்கு எங்களுக்குக் கண்ணாலமுங்க...'' என பிரபுதேவாவும் பட்டு வேட்டி பர்ச்சேஸ் முடித்தார். சாயங்காலமே, 'அங்கிட்டு பிள்ளைகளப் பாக்க பிரபுதேவா போறாரு... இங்கிட்டு தாரா ராவா அடிக்கிறாங்க’ என்றெல்லாம் சினிமா ரிப்போர்ட்டர்கள் டாப்அப் பண்ண, பணாலானது காதல். ''பிரேமம் முறிஞ்சு போயி... பிரபு ஒரு பிராந்து...'' என அறிவித்தபடியே ஆர்யா வீட்டுக்குப் போனார் நயன்தாரா. 'அடுத்த விக்கெட் ஆர்யா’ என மிஸ்டர் மியாவ் வரைக்கும் போட்டுத்தாக்க, ''ஆமான்டா மச்சான்... இல்லடா மச்சான்'' என விஷால், சிம்பு குரூப்பை வெறுப்பேற்றினார் ஆர்யா. இடையில், ஜெ-விஜயகாந்த் சந்திப்பு ரேஞ்சுக்குத் திடீர் பரபரப்பைக் கிளப்பியது சிம்பு-நயன் மீட்டிங். 'பார்த்துக்கிட்டாங்க... கோத்துக்கிட்டாங்க’ என போட்டோவெல்லாம் வர, 'பார்கே... பார்கே...’ எனக் கொந்தளித்தது கோலிவுட். நீயெல்லாம் இன்னும் நல்லா வருவம்மா!
கலைஞர்... காமெடி வலைஞர்!
''ஆனாவும் வேணாம்... ஊனாவும் வேணாம். பேனாவ மூடுங்க தலைவரே... ஃபேஸ்புக்குக்கு வாங்க...'' என துரைமுருகன் வெற்றிக்குறி காட்ட, எஃப்.பி-யில் அக்கவுன்ட் ஆரம்பித்தார் கருணாநிதி. 'கேகே’யெனக் கிளம்பிய இளவட்டம் கழுவிக் கழுவி ஊற்ற... ஒரே நாளில் லாக் அவுட் ஆனார். ''பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால், கூட்டணியைவிட்டு வெளியேறவும் தயங்க மாட்டோம்'' என்று காது விடைத்தவர், இரண்டு மணி நேரத்திலேயே, ''அப்படிச் சொல்லவே இல்லையே... இது பத்திரிகைகளின் சதி...'' என்று தோசையைத் திருப்பிப்போட்டுக் கருக்கினார். ''கலாம் என்றால் கலகம் என்று பொருள்'' என்று நடுவில் கலாமைக் கலாய்க்க, மூக்கு விடைத்தன முஸ்லிம் அமைப்புகள். ''பொழுது போயிருச்சு... ஒண்ணும் நடக்கலையே...'' எனப் பொட்டு தட்டியவர், 'டெசோ’வில் இறங்க, 'ஈழம் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது’ என்கிற மத்திய அரசின் அறிவிப்பைப் பார்த்து அல்லு விட்டார். நடுவில் திடீரென கறுப்புச் சட்டையை மாட்டிக்கொண்டு வந்து, ''காஸ்ட்யூம் சேஞ்ச்...'' எனத் தலைவர் பண்ணியதெல்லாம் அன்பிலீவபிள் காமெடி.
எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!
சினேகா-பிரசன்னா ஜோடிதான் இந்த வருடத்தின் பப்ளிகுட்டி டார்லிங்ஸ்.
'சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் சம்திங் சம்திங்’ என கொஞ்ச நாளாகவே புகைந்தது. ''ஆமா... அதேதான்'' என இருவரும் ஓப்பன் பேட்டி தட்டினார்கள். இல்லறம் கண்டது ஜோடி. அதுவரை அழகு... வாழ்த்துகள். அப்புறம் இருவரும் அடித்த விளம்பர அலப்பறைகள் அத்தனையும் 'பிச்சு... பிச்சு’ காமெடிகள். திருமண வீடியோவையே தனியார் சேனலுக்கு விற்றார்கள். திடீரென்று, 'சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?’ என்று போஸ்டர்கள் பொளக்க, 'அச்சச்சோ... அதுக்குள்ளயா?’ என டாஸ்மாக்கில் கூடிக் குமுறினான் தமிழன். அப்புறம் அது 'ஆடி மாச’ விளம்பர ஸ்டன்ட் எனத் தெரியவர, 'பெட்ரோல் குண்டு வீசிருவோமா...’ என வெறியானான். சாம்பார், ரசப் பொடி, நகை, துணி என்று வெறித்தனமாக விளம்பரங்களில் வர ஆரம்பிக்க... ''இவங்க கல்யாணமே ஒரு விளம்பரம்தானோ?'' எனத் தலைகீழ் டவுட்டு சிரசாசனத்திலேயே இருந்தான் தமிழன்!
ஹி இஸ் வெயிட்டிங்!
எஸ்.ஏ.சி-தான் இந்த வருடத்தின் புஸ்ஸ்ஸ்ஸ்.ஏ.சி!
ஜெயலலிதா ஜெயித்ததும் ரவுண்டு கழுத்து பனியனோடு விஜய்யை அழைத்துக்கொண்டு பொக்கே தட்ட கார்டனுக்குப் போனார். ''யாரு... மணப்பாற சுப்பிரமணியா?'' என ஜெ. கேட்க, அரசியல் புரிந்து பொறி கலங்கினார் புரட்சி இயக்குநர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சேரில் அமர்ந்தது என்னவோ பக்கா... அடுத்தடுத்த பஞ்சாயத்துக்கள் அவரை ஆக்கியதே சுக்கா. எதிர் அணியில் சுமார் 200 தயாரிப்பாளர்கள் குரூப் கட்டி, 'அதுக்கெல்லாம் அவர் சரிப்பட்டு வர மாட்டாருங்க...’ என டவுசரைக் கிழிக்க, 'சட்டம் ஒரு இருட்டறை’ டி.வி.டி-யைப் பலமுறை பார்த்து மயக்கமாகியிருக்கிறார்.
ஒரு பாடல் வெளியீட்டு விழாவில், 'விஜய் ஒன்றும் அழகான ஹீரோ இல்லை’ என்று பேசிவைக்க, வீட்டில் டின்னரை கட் பண்ணியிருக்கிறார்கள். துப்பாக்கி - கள்ளத் துப்பாக்கி டைட்டில் விவகாரத்தில், கள்ளத் துப்பாக்கி படத் தயாரிப்பாளர் ரவிதேவன், 'எஸ்.ஏ.சி. என்னைக் கொலை செய்யறதா துப்பாக்கி காட்டி மிரட்டுறாரு’ என்று எஸ்.ஏ.சி. மீது போலீஸில் புகார் கொடுக்க, 'யாரு... நானு... துப்பாக்கியக் காட்டி... மூலிகை ஆயில் எங்கங்க கிடைக்கும்?’ எனப் பேசி பிரச்னையை முடித்தார் டாடி!
கிளாமர் தாதா!
டந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் பிஸி யான புவனேஸ்வரிக்கு இந்த வருஷம் என்ன வேலை என ஆவலோடு காத்திருந்தான் தமிழன். சும்மா இருப்பாளா சுகுமாரி..? நடிகை ஆக்குவதாகச் சொல்லி 40 லட்சம் மோசடி, ஃபைனான்ஸ் வாங்கித்தருவதாக மோசடி, கார் வாங்கியவரிடம் பணம் செட்டில் செய்யாமல் கொலை மிரட்டல் என 10-க்கும் மேற்பட்ட 'சமூகசேவை’ வழக்குகளில் சிக்கி லைட்டடித்தார் புவனேஸ்வரி. ஹை லைட்டாக கிழக்குக் கடற்கரை சாலைத் தகராறில் சமாதானம் செய்ய வந்த போலீஸையும் பொளக்க, 'புட்றா... புட்றா’ என விரட்டியது காக்கி. புவாவுக்கு இப்போ புவ்வா ஜெயிலில்!
ஈமு சாப்பிடு மாமு!  
2012-ன் கொக்கரக்கோ காமெடி. 'ஈமு கோழி... சாப்பிடு மாமு’ என்று ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குப் போட்டியாகக் கிளம்பியது இந்தக் கோழி பிசினஸ். கடை திறக்க நமீதா வர, 'கோழியப் பாக்கறதா கொமரியப் பாக்கறதா...’ எனக் கும்மியடித்தது ஜனம். சினேகா, சத்யராஜ், பாக்யராஜ், சரத்குமார் என எல்லா சமூக சேவகர்களும் விளம்பரத்தில் வூடுகட்ட, பிச்சுக்கிச்சு பிசினஸ். சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் பக்கம் இருந்த நூற்றுக்கணக்கான பண்ணைகளில் தங்க நாணயத் திட்டம்... அது இதுவென வரிசை கட்டிய வாடிக்கையாளர்களை மொட்டை அடித்தார்கள் ஈமு மாமூக்கள். சுமார் 20 ஆயிரம் பேரிடம், 500 கோடிக்கும் மேல் சுருட்டினார்கள். இரை இல்லாமல் பசியால் ஈமு கோழிகள் செத்தது பெரும் துயரம்!
2012ன் டாம் அண்ட் ஜெர்ரி!
மாற்றான்களாக வளைய வந்த வைகோ - நாஞ்சில் சம்பத்துக்கு நடுவிலான உள்குத்து 2012-ன் காமெடிக் குத்து. ''ஆலம்பனா... நான் உங்கள் அட்ட்ட்டிமை...'' என விளக்கு பூதம் மாதிரி வைகோ-வின் பின்னால் திரிந்த சம்பத், திடுதிப்பென ஸ்க்ரூ கழட்ட, கழன்றது உறவு. ''பல பிரச்னைங்க... வைகோ அய்யா உள்ள வரும்போது, 'ம்மேஏஏஏ...’னு கத்திக்கிட்டே சம்பத் வெளிய போவாரு. அவரு பேசும்போது இவரு, 'ஹல்லோ... ஹல்லோ... சித்தன் சவுண்ட் சர்வீஸ்’னு குரல் கொடுப்பாரு. பல பிரச்னைங்க...'' எனத் தார் பூசியது தாயகம் வட்டாரம். 'என்னை வேலைய விட்டு நீக்குங்கடா... கப்பல்ல வேல கிடைச்சுருக்குடா...’ என சம்பத்தின் சலம்பல் உக்கிரமாகவே, 'சங்கொலியில்’ ஜாடையாகச் சாணி அடித்தார் வைகோ. 'அங்க போவாரு... இங்க போவாரு’ பூச்சி காட்டிய நாஞ்சில், அம்மா கட்சியில் வளைந்து கும்பிட்டபடி கூட்டுப் பொரியல் வாங்கினார். குரு வழக்கம்போல வாக்கிங் கிளம்ப, ஜெ. கொடுத்த இன்னோவாவில் பழிப்பு காட்டியபடி பயணம் போகிறார் சிஷ்யன்!
'பாதாள பைரவி’ பார்ட் டூ!
இந்த ஆண்டின் செம கெடா வெட்டு, கிரானைட் பி.ஆர்.பி-க்குத்தான். மதுரை கலெக்டராக இருந்த சகாயம் வீசிய அணுகுண்டில், நொறுங்கியது பி.ஆர்.பி. கோட்டை. சகாயத்தின் ரகசிய அறிக்கை லீக் ஆக, பி.ஆர்.பி-யில் இருந்து துரை தயாநிதி வரைக்கும் சிக்கிச் சிதைந்தார்கள். தலைமறைவான பழனிச்சாமி டெல்லி வரைக்கும் உருண்டுவிட்டு, 10 நாள் தாடியோடு, 'அய்யா கும்புட்டுக்கறேன்...’ என சரண்டர் ஆனார். அப்புறம்தான் அதிர்ச்சிக் காமெடிகள். 'அய்யா... என் கிணத்தைக் காணோம்’ மாதிரி 'அய்யோ... எங்க ஊரு கண்மாயைக் காணோம்... மலையைக் காணோம்’ எனக் கிளம்பி வந்தார்கள் நாட்டாமைகள். தென் மாவட்டங்களில் வருவாய்த் துறையின் பியூனைக்கூடத் தூங்கவிடாமல், விடிய விடியக் கணக்கெடுத்ததில்... ஏகப்பட்ட சுரண்டல்கள் அம்பலமாயின. பல கண்மாய்களைத் தோண்டி எடுத்து, அதன் மீது கிரானைட் கழிவுகளைக் கொட்டிக் கட்டடங் களையே எழுப்பிவிட்டார்கள். பி.ஆர்.பி. கைதுக்குப் பிறகு நடந்ததெல்லாம் 'பாதாள பைரவி’ பார்ட் டூ!
தமிழகத்தைத் தாக்கரே!
'முஷ்டி முறுக்கும் அண்ணனின் புகைப்படத்தைத்தான் சுவரொட்டியில் பதிக்க வேண்டும்’ என்பதுபோல, 'நாம் தமிழர்’ கட்சியின் 'கண்டிஷன்ஸ் அப்ளை’கள் வெளியாக, இணையத்தில் எகிறி எகிறி கமென்ட் போட்டார்கள். வேளாங்கண்ணிக்கு இலங்கையில் இருந்து வந்தவர்களின் வாகனங்களை சீமான் ஆட்கள் வெளுக்க, 'அடிவாங்கியவர்களில் இலங்கைத் தமிழர்களும் உண்டு’ என்று விவகாரம் கிளம்ப, சீற்றத்தைக் குறைத்து சைலன்ட் மோடுக்குப் போனார் சீமான். 'பெரியாரால்தான் தமிழன் கெட்டான்’, 'திராவிடத்தால்தான் தமிழகம் நாசமானது’ என 'ஹய்யோ ஹய்யோ’ ஆவணத்தை சீமான் வெளியிட, கோவணத்தைக் கிழித்துத் தோரணம் கட்டினார்கள் பெரியார் தொண்டர்கள். கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ''ஆவணமா, அப்படியா, வந்துடுச்சா? அதுக்குள்ளேயேவா?'' என்று பிதுங்கிப் பிதுங்கிப் பேஸ்த்தடித்தார். ''கொளத்தூர் மணி விமர்சிக்கிறாரே, வைகோ கண்டனம் தெரிவிக் கிறாரே'' என்று கேள்வி கேட்டால், ''நான் பெரியாரின் பேரன்தான், கொளத்தூர் மணி என் அண்ணன்தான்'' என்று கூச்சப்படாமல் 'குடும்பப் பாட்டு’ பாடினார் சீமான்!
அன்லைக்!
சிட்டி சென்டர் ரவுண்ட்அப் முடிந்தும் பாடகி சின்மயிக்குப் போரடிக்க, ட்விட்டரில் பொங்கல் வைத்தார். 'மீன்களை மீனவர்கள் கொல்றாங்கோ... மீனவர்களை இலங்கைக் கப்பல் படை கொல்லுது. இதுல என்ன தப்பு’ என்கிறரீதியில் அவர் ட்விட்டியதாகச் செய்தி கிளம்ப... கொந்தளித்தார்கள் இணையப் புரட்சியாளர்கள். 'சின்னாத்தா... இப்ப வந்து பதில் சொல்லு மங்காத்தா’ என வம்படி கமென்ட்டுகள் வலை போட்டு இழுக்க, போலீஸ் கமிஷனரிடம் வந்து 'மசாலா தடவுறாங்கோ... மசாலா தடவுறாங்கோ’ எனக் கூவினார். உடனே, ட்விட்டர் கரடிகளுக்குக் காப்புப் போட்டது போலீஸ். ''நான் தமிழர்களுக்கு எதிரானவ இல்லை. மறவர் சீமையில் தமிழ் வளர்த்த குடும்பப் பெண்...'' என சின்ஸ் பன்னீர்க் காவடி தூக்க, ''ராஜன் லீக்ஸுக்கு சஸ்பெண்ட் ஆகிருச்சு...'' எனப் பால் காவடி எடுத்துவந்தது எதிர் குரூப். நடிகர் சிம்பு திடீரென எதிர் சந்தில் ஓடி வந்து, ''என்னைக்கூடத்தான் காமெடி பண்றாங்க... மிமிக்ரி பண்றாங்க. நாங்க எல்லாம் கூலா இருக்கோம்ல. இதை எல்லாம் அப்படியே விட்டுறணும்...'' என்று சின்மயிக்கு அட்வைஸ, ''ஊர்க்கட்டு சொல்லிருச்சு... நகரு நகரு...'' எனக் கலைந்தது கூட்டம்!
பகீர்... திகீர்... டகீர்!
ந்த வருடம் வதந்தி வருடம்... 'அஸ்ஸாமில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதற்குப் பதிலாக, இங்கே உள்ள வடகிழக்கு மாநிலத்தவரை சிறுபான்மையினர்கள் தாக்கப்போகிறார்கள்’ என டெரர் ரூமர் கிளம்ப, வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில்வே ஸ்டேஷன் களில் எகிற ஆரம்பித்தார்கள். 'ரம்ஜானுக்கு மெஹந்தி வைத்துக்கொண்ட பெண் ஒருவர் இறந்துவிட்டார்’ என்று கிளம்பிய வதந்தியால், மெஹந்தி பார்ட்டிகள் மிரண்டார்கள். கிருஷ்ணகிரி - தர்மபுரி ஏரியாவில், 'மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒன்று, பிறந்த உடனேயே பிரசவம் பார்த்த டாக்டரைப் பார்த்துக் கண்களை உருட்டி, 'நாலாயிரம் குழந்தை களைப் பழிவாங்காம விட மாட்டேன்!’ என்று தெலுங்குப் பட ஸ்டைலில் மிரட்டியது எனக் கிளம்பிய வதந்தியால் ஃபுல் த்ரில்லானது தமிழகம்!

2012 டாப் 10 மனிதர்கள்


விகடன் டீம்
போராட்டத்தின் மைந்தர்கள்!
ங்கள் மண்ணையும் மக்களையும் காக்கப் பொங்கி எழுந்த இடிந்தகரை கடல் மைந்தர்களைத் தேசமே திரும்பிப் பார்த்தது. உண்மையான மக்கள் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிகழ்த்திக் காட்டியது, இந்தியாவின் தென்கோடிக் கிராமமான இடிந்தகரை. பொட்டல் மண்ணில் சிறு பொறியாகத் துவங்கிய அணு உலைக்கு எதிரான முழக்கத்தை வரலாறாக வளர்த்தெடுத்தனர் இந்த ஏழை மக்கள். 'பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்’ என்று பிரதமர் வரை குற்றம்சாட்டியபோதும், துவளவில்லை ஜனத்திரள். பேச்சுவார்த்தைகள், பேரம், தேசத்துரோக வழக்குகள், குண்டர் சட்டக் கைது கள், கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடிகள் என அரசின் அத்தனைத் தந்திரங்களையும் தவிடு பொடியாக்கியது போராட்டக் குழு. நாளாக நாளாக இவர்கள் நெஞ்சுரம் பெறுவதால், கனல்கிறது போராட்ட நெருப்பு. உண்ணாவிரதப் பந்தலில் பீடி சுற்றியபடியே, அணு உலை அரசியல் பேசும் மூதாட்டியே இதற்கு சரித்திரச் சாட்சி. தங்கள் மண்ணுக்காக மட்டுமல்ல... ஈழம், முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு என இதர சமூகப் பிரச்னைகளுக்காகவும் போராடும் இந்த சமூகப் போராளிகள் நம் ஒவ்வொருவருக்குமான உதாரணங்கள். ஒருவேளை இடிந்தகரை மக்களின் போராட்டம் கடந்தும் கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கலாம். ஆனால், இனி இந்தியாவின் எந்தப் பிரதேசத்திலும் மாபெரும் மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ளாமல் அணு உலை அமைப்பதற்காக ஒரு சிறு கல்லையும் அசைக்க முடியாது. அதுதான் இடிந்தகரை மக்களின் உண்மையான வெற்றி!
இ மெயில் தமிழன்!  
'இ மெயில் கண்டுபிடித்தவர்’ என்று இன்று உலகமே கொண்டாடும் சிவா அய்யாதுரை, ராஜபாளையம் தமிழன் என்பது நமக்கான பெருமை. 1978-ல் அமெரிக்காவில் படித்தபோது, தனது 14 வயதில் இவர் இ மெயிலைக் கண்டுபிடித்தது அறிவுலக ஆச்சர்யம். 1982-ல் அமெரிக்க அரசிடம் இருந்து, உலகின் முதல் இ மெயில் காப்பிரைட்ஸ் பெற்றார். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இணையத்தைக் கட்டுப்படுத்த, யார் யாரோ இ மெயிலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். அறிவாயுதம் ஏந்திப் போராடினார் சிவா. உண்மை வென்றது. இ மெயில் மட்டும் இல்லாமல், அமெரிக்கத் தபால் துறையின் மறுமலர்ச்சிக்கும் காரணமானவர். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, இவரது நிறுவனம் ஒன்றின் சேவை பெறும் வாடிக்கையாளர். இந்திய அறிவியல் துறையின் ஊழல்கள்குறித்து இவர் எழுதிய கடிதம், நம் தேச நலனுக்கான ஆராய்ச்சி மணி. 'புதுமைகளை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், யாராலும் செய்ய முடியும்’ என்கிற சிவா, தமிழர்களின் பெருமைமிகு அடையாளம்!
அறிவியல் தமிழச்சி!
ரியலூரில் பிறந்து, ஆச்சர்ய உயரங்கள் தொட்ட இஸ்ரோ சயின்டிஸ்ட் வளர்மதி. தேசிய அளவில் திட்ட இயக்குநர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண். செயற்கைக்கோள் செலுத்துதல் போன்ற அதிநவீன அறிவியல் துறையில் தமிழ்ப் பெண்கள் எட்டிப்பார்க்காத நிலையில், வளர்மதி இந்தியாவின் முதல் சுயேச்சை உளவு செயற்கைக்கோள் ரிசாட் 1-ன் திட்ட இயக்குநர் ஆனது அற்புதமான சாதனை. அயராத உழைப்பும் தேடலுமாக அவர் கால் நூற்றாண்டுக்கு முன்னரே சென்ற பயணம் இளைய தலைமுறைக்கான பாடம். 1984-ல் இஸ்ரோ வில் ஓர் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்து, செயற்கைக்கோள் திட்டப் பொறியாளர், திட்ட மேலாளர், துணைத் திட்ட இயக்குநர், இணைத் திட்ட இயக்குநர் எனப் படிப்படியாக உயர்ந்து, 2012-ல் 'ரிசாட் 1-’ன் திட்ட இயக்குநராக உச்சம் தொட்டார். இந்தியா ஏவிய செயற்கைக்கோள்களிலேயே அதிக எடைகொண்டது ரிசாட் 1. விமானங்கள்கூட ஊடுருவ முடியாத அடர் வனங்கள், குகைகள், நீர்ப்பரப்புகளைப் படம் எடுக்கும் திறன் கொண்ட செயற்கைகோள் அது. ஆனால், இந்தச் சாதனையின் எந்தச் சுவடும் இல்லாமல், 'நம் தேசத்தின் கனவுகளை நனவாக்குவதே இலக்கு. இன்னும் நிறைய வேலை இருக்கிறது’ என எளிமை பேசுகிறார் இந்த முன்னுதாரணத் தமிழச்சி!
வணக்கத்துக்குரிய வாத்தியார்!
டகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச் செல்லும் ஏகலைவன்... சென்னையைச் சேர்ந்த நாகராஜ். கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே. ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லா மல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை. அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100-க்கும் அதிக மானோர் தேசியத் தடகளச் சாம்பியன்கள். இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும் விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ். மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங் களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம்போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ்நாட்டில் இருந்து பல ஒலிம்பியன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!
சளைக்காத சட்டப் போராளி!
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகச் சட்டச் சாட்டை சுழற்றும் போராளி 'பொறியாளர்’ சுந்தர்ராஜன். 'பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்தவர். 'அணு உலைக்கு 1989-ல் வாங்கிய சுற்றுச்சூழல் அனுமதி, 2011-க்கும் பொருந்தும்’ என்று சொன்ன அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் இவர் தொடர்ந்த வழக்கில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வலுப்பட்டது. 'ஜப்பான் - ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அணுசக்தி ஆணையம் அமைத்த குழு பரிந்துரைத்த 17 வகையான பரிந்துரைகளை நிறை வேற்றாமல் கூடங்குளம் அணு உலையைத் திறக்கக் கூடாது’ என இவர் தொடர்ந்த வழக்கில்தான், 'அணுக் கழிவுகளை ஏழு ஆண்டுகளுக்கு கூடங் குளத்திலேயே வைத்திருப்போம்’ என்று முதல் முறையாக அணுக் கழிவுகளைப் பற்றி வாய் திறந்தது அணுசக்தி ஆணையம். இந்தியாவின் முதல் 1,000 மெகாவாட் அணு உலையான கூடங் குளம் உலையில் விபத்து ஏற்பட்டால், அதற்கான நஷ்டஈடு கொடுப்பதில் இருந்து ரஷ்ய நிறுவனத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்தும் வழக்கு நடத்திவரும் கலகக்காரர். நன்றி நண்பரே! 
விவசாயக் காதலன்!
ந்திய விவசாயிகளின் நலனுக்காக கால் நூற்றாண்டாகத் தீவிரமாக இயங்கிவரும் 'அறச்சலூர்’ செல்வம், நம் பூமி நேசன். இயற்கை விவசாயம் பரப்புதல், மரபணு மாற்றுப் பயிர்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்கிற தளங்களில் இவரது பணிகள் வணங்கத்தக்கவை. விவசாயிகளுக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கை விவசாயம், செயற்கை உரங்களின் கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருகிறார். 'கான் உலா’ என்ற பெயரில் 125 பள்ளி மாணவர்களை, வனப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று இயற்கையின் ஸ்பரிசத்தை, முக்கியத்துவத்தை உணரச் செய்கிறார். மரபணு மாற்றப்பட்ட 'மான்சான்டோ’ நிறுவனத்தின் விதைகளை, சோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை யில் பயிர் செய்தபோது, வளாகத்தினுள் சென்று இவர் நடத்திய போராட்டம் அதிகாரத்தைத் திகைக்கவைத்தது. மிரண்டுபோன 'மான்சான்டோ’ நிறுவனம் செல்வத்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் ஆராய்ச்சி நிறுவனங்களைச் சுற்றிக்காட்டி இவரை வளைக்கப் பார்த்தது. திரும்பி வந்தவர், 'உலகெங்கிலும் இருக்கும் விவசாய நிலங்கள் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறது மான்சான்டோ. விதைகளுக்கான பேடன்ட் பெறுவதில் பேய்த்தனமாக இயங்குகிறார்கள். விதைகளைக் கடையில் இருந்து வாங்குகிறீர்கள் என்றால், உங்கள் நிலம் கைவிட்டுப்போகிறது என்று அர்த்தம். எனவே, விதை நெல்லை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள்!’ என்று களப் போராளியாக முழங்கினார். செல்வத்துக்கு தமிழ் மண் கடமைப்பட்டிருக்கிறது!
அசத்தல் அதிகாரிகள்!
மோசமான செயல்பாடுகளால் சிதைந்துகிடந்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) தூக்கி நிறுத்தியது ஆர்.நட்ராஜ் - உதயச்சந்திரன் கூட்டணி. லஞ்சம் கொடுத்தால், சிபாரிசு இருந்தால் மட்டுமே அரசு வேலை என்றிருந்த நிலையை அதிரடியாக மாற்றி அமைத்தார் உதயச்சந்திரன். நடைமுறை மோசடிகளை வேரறுக்கப் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளே புகுந்து, தேர்வாணையத் தலைவர் உள்ளிட்டோரைப் பந்தாடியது. ஓய்வுபெற்றிருந்த ஆர்.நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு எழுதி முடித்த மறுநாளே விடைகளை ஆன் லைனில் வெளியிடுவது, வரும் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைகள், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகம் என லட்சோபலட்சம் தமிழக இளைஞர்களின் மனதில் நம்பிக்கை ஒளியேற்றியது இந்தக் கூட்டணி. இடையில், உதயச்சந்திரன் மாற்றலானாலும் சீரான நிர்வாகத்தைத் தக்கவைத்தார் நட்ராஜ். அவ்வளவு கெடுபிடியிலும் குரூப்-2 வினாத்தாள் வெளியானதாகச் சர்ச்சை கிளம்பியபோது, தமிழகத் தேர்வாணைய வரலாற்றில் முதல்முறையாக நடந்து முடிந்த தேர்வை அதிரடியாக ரத்து செய்தார் மீசைக்காரர். நேர்மைப் பவனி தொடரட்டும்!
இதயம் உலுக்கிய இயக்குநர்!
காதலும் மனிதமும் பேசும் பாலாஜி சக்திவேலின் திரைப்படங்கள், தமிழ் சினிமாவுக்கு அவசிய ஆக்சிஜன். 'காதல்’ படத்தில் விடலைக் காதலின் ஜன்னல் வழியே சாதியின் கோரத்தையும் அன்பின் ஈரத்தையும் காட்டியபோது, தடதடத்தது தமிழ்த்திரை. 'வழக்கு எண் 18/9’-ல் பாலாஜி தொட்டது இன்னும் உயரம். நலியும் விவசாயம், குழந்தைத் தொழிலாளர் கொடுமை, பெண்களின் பாதுகாப்பு, காவல் துறையின் அராஜகம், அரசியல் அதிகாரத் துஷ்பிரயோகம், நாட்டுப்புறக் கலைகளின் அழிவு, வக்கிர இளைஞர்களின் மொபைல் கலாசாரம், எளிய மனிதர்களின் பேரன்பு... என 'வழக்கு எண்’ பேசியது அபாரமான திரைமொழி அரசியல். '5-டி’ என்ற புகைப்பட கேமரா தொழில்நுட்பத்தில், மிகக் குறைந்த செலவில் முழுத் திரைப்படத்தையும் எடுத்தது, இன்னொரு சாதனை. எந்த சமரசங்களும் இல்லாமல், எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் துணிந்து பேசும் இந்த திண்டுக்கல்காரரின் திரைப்படங்கள் இந்த மண்ணுக்கானவை... மக்களுக்கானவை! 

நம்பிக்கைத் தோழி!
ழுத்து, நாடகம், ஆவணப்படம் எனக் கலைகளின் வழியே திருநங்கைகளின் மேம்பாட்டுக்காகப் போராடிக்கொண்டே இருப்பவர் ப்ரியா பாபு. இந்த சேவைகளுக்காக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், 'பெரியார் விருது’ வென்றவர். 2004-ல் இவர் தொடர்ந்த வழக்கின் மூலமாகவே, திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது. தொடர்ந்து, செங்கல்பட்டில் திருநங்கைகளுக்கு அரசு வீடு பெற்றுத் தந்தது, 'கண்ணாடி கலைக் குழு’ மூலம் பிரசாரம் செய்வது என இவர் திரி தீண்டிவைத்த விளக்குகள் ஏராளம். திருநங்கைகள் குறித்த எழுத்துக்கள், குறும்படங்கள்,
பி.ஹெச்டி. ஆய்வறிக்கைகள் என்று சிதறிக் கிடக்கும் பதிவுகளைத் தொகுக்கும், 'பாலியல் சிறுபான்மையினருக்கான நூலகம்’ உருவாக்கு வது ப்ரியாவின் கனவுத் திட்டம். எல்லாக் கனவுகளும் நனவாகட்டும்!
அர்ஜுனா அழகி!
மிழக விளையாட்டுத் துறையின் பெருமிதம், தீபிகா பல்லிகல். கொஞ்சம் வெற்றி, நிறையத் தோல்வி என ஜிக்ஜாக் கிராஃபில் இருந்த தீபிகா, இந்த ஆண்டு வெடித்துக் கிளம்பினார். ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற சாரா ஃபிளிட்ஸ் ஜெரால்டிடம் பயிற்சி பெற்ற பின், தீபிகா ஆடியது எல்லாமே வெற்றி வேட்டை. இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் போகாத 'டோர்னமென்ட் ஆஃப் சாம்பியன்ஸ்’ போட்டியில் முதல்முறையாகக் கால்வைத்தார். அர்ஜுனா விருது பெற்றது, சர்வதேச விஸ்பா ரேங்கிங்கில் 10-வது ரேங்கிங் குக்குள் கால்வைத்த முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை எனக் குவிந்தன பெருமைகள். 21 வயதுக்குள் ஜெர்மன் ஓப்பன், டச் ஓப்பன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன், ஸ்காட்டிஷ் ஓப்பன், ஈரோப்பியன் ஜூனியர் ஸ்குவாஷ் சர்க்யூட் என ஆறு பட்டங்களை வென்ற வர், இன்னும் இன்னும் உயரம் தொடுவார் என்பது நன்னம்பிக்கை! 

2012 - டாப் 10 நம்பிக்கைகள்


அதிரடி ஐ.ஏ.எஸ்!
பாலாஜி, அடிப்படையில் ஐ.ஐ.டி. பொறியாளர். விருதுநகர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின், 30 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்குத் தபால் மூலம் வீடுகளுக்கே சாதிச் சான்றிதழ்கள் அனுப்பிவைத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு பேப்பர் கப் தயாரிக்கும் மையம் அமைத்துத் தந்தது, பஞ்சாயத்து நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட சுமார் 40 பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு 'செக்’ பவரைப் பறித்தது என இவரைத் திரும்பிப் பார்த்தது தமிழகம். ஆளும் கட்சி, அதிகார வர்க்கத்தினரின் சிபாரிசுகளைக் குப்பையில் போட்டுவிட்டு, சத்துணவுத் திட்டத்தில் 1,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களை நியமித்தது, பாலாஜியின் சூப்பர் ஷாட். நேர்மைக்குப் பரிசு வேண்டுமே?! விருதுநகரில் இருந்து மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர், சமீபத்தில்தான் மாநிலத் திட்டக் கமிஷனின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்!
எதிர்நீச்சல் சாம்பியன்!
னுஷாவுக்கு பிறக்கும்போதே சுவாசப் பிரச்னை. 'உயிருக்கே உத்தரவாதம் இல்லை!’ என்று மருத்துவர்களால் சொல்லப்பட்ட அனுஷா, இன்று 160 தங்கப் பதக்கங்கள் வென்ற நீச்சல் சாம்பியன். சென்னை லேடி ஆண்டாள் பள்ளியின் 12-ம் வகுப்பு மாணவி. 'ஃப்ரீ ஸ்டைல் டிஸ்டன்ஸ்’ போட்டியில் நேஷனல் சாம்பியன். இடைவிடாத முயற்சியும் பயிற்சியுமாக இந்த ஆண்டு மட்டும் ஆறு தங்கப் பதக்கங்களைக் குவித்திருக்கும் அனுஷாவின் ஒரே இலக்கு, ஒலிம்பிக் தங்கம். ஆல் தி பெஸ்ட் கண்ணம்மா!
டேக் இட் ஈஸி தோஸ்த்!
பாலாஜி... விசில் பிகில் கிளப்பும் ஆர்.ஜே! பிக் எஃப்.எம்மில் இவரின் 'டேக் இட் ஈஸி’, 'கிராஸ் டாக்’ நிகழ்ச்சிகள் செம அலப்பறை அட்ராசிட்டி. அதிலும், சினிமாக்களைக் கலாய்க்கும் 'கிராஸ்டாக்’ நிகழ்ச்சியை 197 நாடுகளில் உள்ள ஒரு கோடித் தமிழர்கள் இணையதளம் மூலம் கேட்டிருப்பது... கிராஸ் பார்டர் ரெக்கார்டு. பாலாஜியின் நிகழ்ச்சிப் பதிவுகளைக் கேட்பதற்காகவே, கூகுள் ப்ளே ஸ்டோரில் பிரத்யேக ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் உண்டு. பாலாஜி 'ஆன் ஏர்’ என்றால், ஏர் டிராஃபிக் அள்ளுது என்று அர்த்தம்!
வணக்கத்துக்குரிய இயக்கம்!
'சுயவாழ்வின் சுகங்களில் திளைப்பவர்கள் ஐ.டி. இளைஞர்கள்’ என்ற விமர்சனங்களை அடித்து நொறுக்கி, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராட வந்த இளைய தலைமுறை அமைப்பு, 'சேவ் தமிழ்ஸ்’. ஈழத்தின் சோகம் பொறுக்காமல் போராடக் கிளம்பிய இந்த இளைஞர்கள், இன்று தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த சக்தி. முல்லைப் பெரியாறு பிரச்னை முதல் பரமக்குடி துப்பாக்கிச் சூடு வரை அனைத்துப் பிரச்னை களிலும் களம் இறங்கிய இவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைப்பாளர் செந்திலின் முயற்சியில், ஆர்ப்பாட்டம், ஆய்வரங்கம், போராட்டம் என்று வீதிக்கு வந்து போராடுவது நாளைகளின் மீது நம்பிக்கையை விதைக்கிறது!
சார்தான் ஹீரோ!
றுப்பு நிறம், களையான முகம் என விஜய் சேதுபதிக்கு அப்படியே 'நம்மாளு’ லுக். கோடம்பாக் கத்தில் இவர் லேண்ட் ஆனது 2003-ல். நடிப்பு ஆர்வத்தில் கூத்துப் பட்டறையில் அக்கவுன்டன்ட் ஆனது முதல்படி. 'புதுப்பேட்டை’ முதல் 'நான் மகான் அல்ல’ வரை பல படங்களில் 'தலை’காட்டியவர், கவனம் ஈர்த்த குறும்படங்களில் பின்னியெடுத்தார். 'தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக நடித்த பிறகும், 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்’ என அடம் பிடிக்காமல் 'சுந்தர பாண்டியன்’ வில்லனாக வந்து அட்டென்ஷன் வாங்கினார். அடுத்தடுத்து 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என இரண்டு படங்களில் பிரமாதப்படுத்த, 'யார்யா இவன்..?’ என நம்பிக்கை விசில் குவிய, இப்போது விஜய் சேதுபதிக்காகக் காத்திருக்கின்றன பல நல்ல கதைகள்!
திருமதி நம்பிக்கை!
ரியலூர் மாவட்டம், இலுப்பையூர் கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த சாந்தி, இன்று மரியாதைக்குரிய மக்கள் நாயகி. கரூர் கோட்டாட்சியராக முதலில் பணியேற்றதுமே, தனது அலைபேசி எண்ணைப் பத்திரிகைகளில் கொடுத்து, மக்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டதில் தெரிந்தது இவரது மக்கள் காதல். கரூரில் கொடிகட்டிப் பறந்த மணல் மாஃபியாக்களை இவர் ஒடுக்கியது அனைத்தும் அதிரடி அத்தியாயங்கள். 'பெண் அதிகாரி’ என்ற சலுகை கேட்காமல், துணிச்சலாக இரவு நேரங்களிலும் ரோந்து சென்று, மணல் திருடர்களை அலறவிட்ட தைரிய லட்சுமி. எதிர்ப்பார் எவரும் இன்றி அமராவதி ஆற்றில் ஆயிரக்கணக்கில் மோட்டார் போட்டு, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் திருடியதைக் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் களம் இறங்கித் தட்டிக்கேட்டதில் அரண்டுமிரண்டது லோக்கல் மாஃபியா. தற்போது உசிலம்பட்டி ஆர்.டி.ஓ-வாக, உசிலம்பட்டிச் சந்தையில் பல்லாண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பரபரக்கும் சாந்திக்கு அழுத்தமாக ஒரு சல்யூட்!
கிரிக்கெட் மின்னல்!
லகக் கோப்பை வென்ற இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியில், அசரடித்த தமிழ்ப் பையன் பாபா அபராஜித். பாகிஸ்தானுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில், அபராஜித் அடித்த அரை சதம்... ஆஹா. அதுதான் இந்தியாவை அரை இறுதிப் போட்டிக்குள் நுழையவைத்தது. இந்த ஆண்டு கர்நாடகாவுக்கு எதிராக நடைபெற்ற ரஞ்சி டிராஃபி போட்டியில் சதம் அடித்து ஃபார்ம் நிரூபித்ததில், இந்திய அணியில் நுழையக் காத்திருக்கிறார்!
நம்பிக்கை இயக்குநர்கள்!
யூகிக்க முடியாத, புதிய கதை சொல்லும் யுத்தியோடு வெளியான 'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’... இரு படங்களும் செம ஸ்வீட். 'பீட்சா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், அடிப்படையில் மென்பொருள் பொறியாளர். குறும்படங்களில் வித்தை பழகி 'பீட்சா’ பரிமாறியிருக்கிறார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி, எடிட்டிங் கோர்ஸ் படித்தவர். கானுயிர் ஒளிப் பதிவாளர் அல்போன்ஸ்ராயின் ஆவணப்படங்களுக்கு படத் தொகுப்பு  செய்தவர். 'உண்மைக் கதை’ என்றாலே சோகத்தைப் பிழியவிடும் டிரெண்ட் உடைத்து, 'என்.கே.பி.கே.’ படத்தில் கதறக் கதறச் சிரிக்கவைத்த இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு... வார்ம் வெல்கம் பாடியது கோடம்பாக்கம். இவர்கள் இருவரிடமும் 'இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்’!
தடகளத் தடம்!
பிரேம்குமார்... மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவருக்கு உழைப்பும் தாகமும் மட்டுமே முதலீடு. அம்மா கிராமத்தில் சர்ச் பெல் அடிக்க, இவர் சர்வதேசக் களங்களில் மெடல் அடிக்கிறார். நீளம் தாண்டுதலில் ஜூனியர் லெவலில் தேசிய சாதனை, கொழும்பில் இளையோருக்கான தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி என முத்திரை பதித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளப் பிரிவில் இந்தியாவில் இருந்து 27 பேர் சென்றதில் ஒரே ஒரு பதக்கம்தான் கிடைத்தது. அது பிரேம்குமார் அடித்தது!
செல்லம்!
த்திக் கண்களும் பொசுபொசு முயல் முகமுமாக லட்சுமி மேனன், தமிழர் ஸ்பெஷல் நாயகி. 'சுந்தரபாண்டியன்’, 'கும்கி’ என நடித்த இரண்டு படங்களும் எகிடுதகிடு ஹிட். அழகில் மட்டும் ஈர்க்காமல், நடிப்பிலும் நம்பிக்கை விதைப்பதால் எட்டுவார் இன்னும் உயரங்கள். அட்வான்ஸ் கொடுக்கப் பலர் க்யூவில் காத்திருக்க, பத்தாம் கிளாஸ் பரீட்சைக்குப் படிக்குது பொண்ணு. ஆத்தா, நீ பாஸாயிட்ட!