Wednesday, November 2, 2011

வீட்டு மனைகளாகும் விவசாய நிலங்கள்!

ராஜா, திருவைகுண்டம்

சில வருடங்களுக்கு முன்பு வரை பச்சைபசேல் என்று இருந்த நெல்வயல்கள் இப்போது வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு வெட்டவெளியாக காய்ந்து கிடக்கின்றன.

ஆதிகாலத்தில் இருந்த மனிதன் பசிக்காக விவசாயத்தைக் கண்டுபிடித்தான். இக்காலத்தில் உள்ள மனிதனோ அதனை பணத்துக்காக அழித்து வருகிறான்.

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

'உலக மயம்' என்ற வார்த்தை இன்றைய உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாடாய்படுகிறது. 'உலக மயம்' 'தாராளமயம்' என்று இவர்கள் வார்த்தைகளை அடுக்கினாலும், உண்மையில் அனைத்தும் தனிநபர்களை முதலாளியாக்குகின்றன. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களின் கையில் உலகத்தையே ஒப்படைப்பதுதான் இந்த வார்த்தைகளின் அர்த்தம்.

வெளிநாட்டு கொள்கையில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும், விவசாயிகளும் விவசாயம் சார்ந்த தொழிலும்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 3 கோடியே 25 லட்சம் ஏக்கர். இதில் 1 கோடியே 27 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கொண்ட விவசாய விளை நிலங்களாகவும், மானாவாரி நிலங்களாகவும் உள்ளன. அக்காலங்களில் விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டது நமது தமிழகம்.

ஆனால், இன்றைய நிலையோ விளை நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் 15 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தற்பொழுது விளைநிலங்களாக இல்லை. 1980 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையிலும் ஆண்டுக்கு 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இப்படி வேளாண் பாதையிலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது.

புதிதுபுதிதாக தொடங்கப்பட்ட மனை விற்பனை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் போட்டிபோட்டு கொண்டு விவசாயத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு கூறுபோட்டு கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டின் இன்றியமையாதது அந்நாட்டின் உணவு உற்பத்தியே. அத்தகைய உணவு உற்பத்தியை இயற்கையாக பெற்றுள்ள நாடு நமது நாடு. அத்தகைய விவசாயத்தை பேணிக்காப்பது நமது கடமை. உணவு உற்பத்தி இல்லாமல் வேறு எந்த வளர்ச்சி இருந்தும் எந்த பயனும் இல்லை என்பது உண்மை.

நமது முழக்கங்களாக இருக்க வேண்டியவை:

> விவசாய நிலங்கள் எப்பொழுதும் விவசாய நிலங்களாக இருக்க வேண்டும்.

> வேளாண் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அரசு கடுமையான தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

> விவசாய காரணங்களைத் தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்தால், அதை சார்பதிவாளர் தடுத்து நிறுத்த வேண்டும்.

> விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

> விவசாயத்துக்காக பெறப்படும் கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.

> ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழி வகை செய்ய வேண்டும்.

> விவசாயத் தொழிலை லாபகரமான தொழிலாக்குவதற்கு எந்த வகையில் எந்தெந்த பயிர்களை எப்படி சாகுபடி செய்ததால் உரிய லாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் பாதுகாப்பு அரசின் கடமை மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கடமையுமாகும். உணவு என்பது இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் தேவை.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.

கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.

tx vikatan

No comments:

Post a Comment