Tuesday, August 7, 2012

எனது இந்தியா! 2

நீதிக்கு போராட்டம்
இன்று ஓர் எளிய மனிதனுக்கு நீதி கிடைப்பதுஎன்பது போராடிப் பெற வேண்டிய காரியமாக ஏன் மாறி​விட்டது? யோசித்துப்பாருங்கள்... நதி நீர்ப் பிரச்னை, எல்லைப் பிரச்னை, இன மொழிப் பிரச்னைகள் என்று எத்தனையோ பிரச்னைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றம் அதற்குத் தீர்வு தந்தாலும், அந்த வழியைப் பின்பற்ற அரசே மறுக்கும் நிலை உருவாகிவிட்டது. என்றால், நீதி உணர்வே இல்லாத காலத்தில் நாம் வாழ்கிறோமா?
இந்திய சரித்திரம் எங்கும், எத்தனையோ விதமான அரசியல் சூழ்ச்சிகள், படுகொலைகள், ஏமாற்று வேலைகள், நம்பிக்கை மோசடிகள், கொலைகள், இன அழிப்பு நடைபெற்று இருக்கின்றன. அவற்றை நாம் மன்னர்களின் தனித் திறமை, வெற்றிக்கான வழிமுறைகள் என்று எளிதாகக் கடந்து போய்விடுகிறோம்.
இந்திய அரியணையைப் போல குருதிக்கறை படிந்த ஆசனம் வேறு எதுவுமே இல்லை. அதிகாரப் போட்டியில் நடந்த சதிகளை எண்ணிப்பாருங்கள்... இறந்த உடல்களின் மீது நடந்துதான் பதவியை அடைந்திருக்கிறார்கள். அது காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய வரலாறு அதையே கேள்வி கேட்கிறது.
எது நீதி, எப்படி நீதி வழங்கப்படுகிறது, ஏன் நீதி புறக்கணிக்கப்படுகிறது என்ற கேள்விகளை ஆராய்ந்து அறியாமல் இந்தியாவின் வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
வரலாறு, ஓர் உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அதிசயங்களை உருவாக்கிக் காட்டுபவர்களின் வாழ்க்கை ஒருபோதும் அதிசயமானதாக இருப்பது இல்லை என்பதே அது!
ஒரு நல்ல உதாரணம்... மொகலாய மன்னர் ஷாஜகான்!
ஒளரங்கசீப்பிற்கு மருத்துவராக இருந்தவர், பிரான்​சிஸ் பெர்னர் என்ற ஒரு பிரெஞ்சுக்காரர். அவர் மொகலாயக் காலகட்டத்தில் தான் நேரில் கண்டு அறிந்த உண்மைகளை 'மொகலாய அரசின் ஊடே ஒரு பயணம்’ என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில், ஒளரங்கசீப்பின் மனநிலையைத் துல்லியமாக விவரிக்கிறார்.


முதிய வயதில் ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஷாஜகான், தொலைவில் தெரியும் தாஜ்மகாலை மௌனமாக வெறித்துப் பார்த்துக்​கொண்டு இருந்தபோது அவரது மனதில் இருந்த ஒரே கொந்தளிப்பு...  'இது எனது இந்தியா, ஆனால் எனக்கு உரிய நீதி கிடைக்கவில்லை!’ என்பதே என்று பெர்னர் குறிப்பிடுகிறார்.
சிறைப்பட்டிருந்த ஷாஜகானைப் பார்த்துக் காலம் சொன்னது, மாமன்னரே அதிகார ஆசை என்பது சொந்தக் குடும்பத்தையும் பலிவாங்கக்கூடியது. பிள்ளைகளால் பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் அரசியலின் நிரந்தர விதி. அதை மறந்துவிட்டீர்களா என பரிகாசத்துடன் நினைவு​படுத்​தியது.
காலத்தின் குரலை செவிமடுத்தபோது, ஷாஜ​கா​னால் அதற்கு எதிராக ஒன்றுமே செய்ய இயல​வில்லை.
ஒவ்வொரு நாளும் அவரது நலத்தைப் பேணுவதற்​காக மூத்த மகள் ஜஹானாரா பேகம் சாஹிப் வந்துபோய்க்கொண்டு இருந்தாள். அவளிடம் 'தன்னை எப்படியாவது விடுதலை செய்யும்படி சகோதரனிடம் மண்டியிட்டுக் கேள், கைதிகளை போல கொட்டடிக்குள் அடங்கி இருக்க என்னால் முடியாது, வேண்டுமானால் நான் சமயத் துறவி போல மசூதிக்குள் வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்கிறேன், இந்த வீட்டுச் சிறை என்பது வேண்டவே வேண்டாம்’ என்று ஷாஜகான் ஆதங்கப்பட்டார்.
தாயின் பரிவையும் தந்தையின் மன உறுதியையும் ஒருங்கேகொண்டு இருந்த ஜஹானாராவால் எதேச்சதிகாரத்தின் முன்னால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.
பனிமூட்டத்தின் ஊடே ஒரு கனவைப்போல ஒளிர்ந்துகொண்டு இருந்த தாஜ்மகாலை ஒளரங்கசீப்​பிற்குப் பிடிக்கவே இல்லை. அவன் அதை வெறுத்தான். முடிந்தால் தகர்த்துவிட வேண்டும் என்று மனதிற்குள்ளாக ஆத்திரப்பட்டான். எளி​மையின் பெயரால் அதிகக் கெடுபிடிகளை, கண்டிப்​​புகளை உருவாக்க முடியும் என்பதற்கு ஒளரங்கசீப்பே உதாரணம்.
சாகும் வரை ஷாஜகானுக்கு நீதி கிடைக்கவே இல்லை. அவர் விரும்பியபடி, இறுதி ஊர்வலம்கூட நடைபெறவில்லை.  ஷாஜகானின் உடலை ராஜ மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, வழி எல்லாம் பூ மாலைகளையும் தங்கக் காசுகளையும் இறைத்து தேசிய மரியாதை தர ஜஹானாரா அனுமதி கேட்டார். ஒளரங்கசீப்போ, எளிய சவ ஊர்வலம் ஒன்றினை நடத்தினால் போதும் என்று அறிவித்தான். சாவுக்குப் பிறகும் ஷாஜகானுக்கான நீதி வழங்கப்படவே இல்லை. அதிகார ஆசையின் முன்னால், அப்பா - பிள்ளை என்ற உறவு அர்த்தமற்றது என்பதை ஒளரங்கசீப் நிரூபணம் செய்தான்.
இப்படி  வரலாற்றின் படித்துறைகளில் நீதி கிடைக்காமலே இறந்துபோனவர்கள் எப்போதுமே காத்துக்கிடக்கிறார்கள். போராடி வென்றவர்களோ வரலாற்றின் வெளிச்சமாக ஒளிர்கிறார்கள். அதுவும் காலம் கற்றுத்தரும் பாடமே!
1717-ம் ஆண்டு  குருவப்பா என்பவர், பிரான்சு மன்னரிடம் தனது தந்தை நைநியா பிள்ளைக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை, அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டார் என்று ஒரு மேல் முறையீடு செய்திருந்தார். அதற்காக அவரே பாரிஸ் நகரத்திற்கு நேரில் சென்றார். மன்னரின் சபையில் நீதி கேட்டு நின்றார். விசாரணை நடைபெற்றது.
நைநியா பிள்ளைக்கு 1715-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் நாள் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு காலனிய அரசு ஒரு தண்டனையை அறிவிக்கிறது... தண்டனை என்ன தெரியுமா?
50 சவுக்கடிகள் தோளில் பெற வேண்டும். அத்துடன், மூன்று வருஷம் சிறைத்தண்டனை. கூடுதலாக 8888 வராகன்களைப் பிரெஞ்சு கம்பெனிக்கு மானநஷ்டமாகக் கொடுக்க வேண்டும், 4000 வராகன் கூடுதல் அபராதம் கட்ட வேண்டும். சிறைத் தண்டனையை அனுபவித்த பிறகு, பிரெஞ்சு எல்லையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், மேற்படி தொகைகளைச் செலுத்தத் தவறினால்... மூன்று வருஷ சிறைவாசத்துக்குப் பிறகு, மோரீஸ் தீவுக்கு அடிமையாய் அனுப்பப்பட வேண்டும் என்பதும் தண்டனை.
அப்படி அவர் செய்த பெருங்குற்றம் அன்றைய கவர்னர் கியோம் குறுக்கு வழியில் சம்பாதிப்பதற்குத் தடையாக இருந்தது, அதுவும் கவர்னருக்காக அன்று உள்ள வணிகர்களிடம் பேரம் பேசிக் கூடுதல் பணம் பெற்றுத்தராதது. கூடுதலாக, இந்தப் பிரச்னையை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோய் கவர்னர் கியோம் ஆந்தரே எபேரை பதவி நீக்கம் செய்ததுதான்.
பதவி இழந்து பிரான்சுக்குப் போன கியோம் வஞ்சம் தீர்க்கக் காத்து இருந்தார். முடிவில், போராடி தனது மகனுக்கு புதுச்சேரியில் உயரிய பதவியை வாங்கித் தந்தார். மகன் புதுச்சேரிக்கு அதிகாரியாக 'இளைய எபேர்’ என்று வந்து இறங்கினான். அதிகாரம் கைக்கு வந்தவுடன் நைநியா பிள்ளையை ஒடுக்க முற்பட்டான். அதற்காகப் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவரை மாட்டிவிட்டு, அதன் காரணமாக கடுமையான தண்டனையும் விதிக்கப்பட்டது.
1717-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நைநியாப் பிள்ளை சிறையிலேயே இறந்து போனார். அவரது மூத்த மகன் குருவப்பா, தந்தைக்கு இழைக்கபட்ட அநியாயத்துக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று மன்னரிடம் மேல்முறையீடு செய்தார்.
முடிவில், மன்னரின் ஆலோசனை சபை, நைநியாப் பிள்ளை தண்டிக்கப்பட்டது தவறு என்று சொல்லி, அதற்கான உரிய இழப்பீட்டை அரசே தர வேண்டும் என நீதி வழங்கியது. நீண்ட போராட்டத்தின் முடிவில் குருவப்பா வெற்றி பெற்றார்.
புதிய பதவியும் கிடைத்தது. ஆனால், இந்த நீதி எளிதாகக் கிடைக்கவில்லை. அதற்கு அவர் கொடுத்த விலை பிரான்சுக்கு சென்றவுடனேயே தன்னை கிறிஸ்துவராக மதம் மாற்றிக்கொண்டது. அதனால், இயேசு சபையின் விருப்பத்துக்கு உரியவராகி பின்பு பிரெஞ்சு அரசின் நீதியைப் பெற்றார்.
நீதியைப் பெறுவதற்கு ஒருவன் எதையாவது ஒன்றை அவசியம் இழக்கவேண்டி இருக்கிறது என்றே வரலாறு நினைவூட்டுகிறது,
வரலாற்றின் வேறு வேறு காலங்களில் நடைபெற்ற இந்தச் சம்பவங்களில் நீதி கேட்பதே பிரதானமாக இருக்கிறது.  அதிகார வேட்கை எப்படி வன்முறைக்குக் காரணமாகி விடுகிறது என்பதையே இது அடையாளம் காட்டுகிறது.
இந்திய சரித்திரத்தில் நம்பிக்கைத் துரோகமும், பரஸ்பர வெறுப்பும் கசப்பு உணர்வும் தொடர்ந்து மேலோங்கி வந்துகொண்டு இருப்பதைச் சுட்டிக்​காட்டவும் இந்த சம்பவங்கள் துணை நிற்கின்றன.
கோவலனைக் கொன்றதற்கு நீதி கேட்க சென்ற கண்ணகியின் ஆவேசத்துக்கும், சிறைத் தண்டனையில் இறந்துபோன தந்தைக்காகப் போராடிய குருவப்​பாவுக்கும் இடையில் நிறைய கால வேறுபாடு இருக்கிறது. ஆனால், அவர்களின் தார்மீகக் கோபமும் ஆதங்கமும் ஒன்றுபோலவே இருக்கிறது.இன்றைய வரலாறு நேற்றைய வாழ்க்கையிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதை நம் காலகட்டத்தின் பெரும் குறைபாடு.
அது களையப்படுமாயின், நாம் நினைக்கும் அற உணர்வும் நீதி உணர்வும் நிச்சயம் மேம்படும். அப்போதுதான் அதிகாரத்திலும் ஆட்சியிலும் நல்லன தோன்றும்.
அது வரை வரலாற்றின் படிக்கட்டில் நிரபராதிகள் காத்திருப்பார்கள்!

எனது இந்தியா! 1

டந்த காலம் நிகழ் காலத்திற்குக் கற்றுத்தரும் பாடத்தின் பெயர்தான் வரலாறு. சரித்திரம் என்பது உறைந்துபோன கற்படிவம் இல்லை, அது வாழ்வனுபவங்களின் வழியே நாம் கவனிக்கத் தவறிய உண்மைகளை, மறந்துபோன நினைவுகளை, அறியப்படாமல்போன துயரங்களை நினைவூட்டும் அறிவுத் துறை.
அதிகாரம் கைமாறுவதன் சரித்திரத்தை மட்டுமே வாசித்துப் பழகிய நமக்கு, சரித்திரம் என்பது ஒரு பெரும் மானுடப் பிரவாகம் என்பதைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகவே இருக்கக்கூடும்.
வரலாற்றின் குரலுக்குச் செவிசாய்க்காமல் நிகழ்காலப் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியாது, வரலாற்றினை ஒரு நதி என உருவகப்படுத்​தினால், ஒரே நதிதான் எல்லாக் காலத்திலும் ஒடிக்​கொண்டு இருக்கிறது, ஆனால், அதில் ஒடும் தண்ணீர் ஒன்றல்ல, தண்ணீர் ஒவ்வொரு பருவ காலத்திலும் அதற்கான விசையோடு வேறுவேறு கதியில் பெருகி ஓடுகிறது
அப்படி வரலாற்றின் போக்​கானது அரசியல், அதிகாரம், கலாசாரம், சமூக மாற்றம் என்று பல்வேறு காரணிகளால் வேகமெடுப்​பதும் தணிவதுமாகவே இருக்கிறது, எந்த விசை, வரலாற்று இயக்கத்தினை சாத்தியப்படுத்துகிறது, எதன் வழியே வரலாறு தன்னை அடையாளப்​படுத்திக்​கொள்கிறது, அதன் பின் இயங்கிய மனிதர்கள் யார் எவர் என்பதை அறிய முற்படும்போது, சரித்திரத்தை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ளத் துவங்குகிறோம்.
நீதிக்காகக் காத்திருப்பது பிறரோடு பகிர்ந்துகொள்ள முடியாத துயரம், மன உளைச்சல். இன்று எளிய மனிதர்களில் இருந்து அரசியல் தலைவர்கள் வரை பலரும் நீதிமன்றத்தில் தங்களுக்கான நீதி கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறார்கள்.
மனு நீதி, விதுர நீதி, சாணக்கிய நீதி, பதினென் கீழ்க்கணக்கு நீதி நூல்கள் என்று எண்ணிக்கையற்ற நீதி சாஸ்திரங்கள் இந்தியாவில் இருக்கின்றன. ஆனால் நடைமுறை வாழ்வில் இவை தனிமனிதனைப் பாதிக்கவே இல்லை.
ஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் வலியும் மௌனமும் கொண்ட மனிதர்கள் நிற்கிறார்​கள், நீதிதேவதை அவர்களை சலனமற்று பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.
இந்திய வரலாறு எத்தனையோ வழக்குகளைச் சந்தித்திருக்கிறது... சில விசித்திரமானவை; சில புதிரானவை.
சுதந்திர இந்தியாவின் முதல் பெரும் நீதி விசாரணை, காந்தி கொலை வழக்கு. வேறு எந்த வழக்கினையும் விட இந்த வழக்கு  முதன்மையானது, காரணம் அஹிம்சையைப் போதித்த காந்தியைக் கொன்றவனை எப்படித் தண்டிக்கப்போகிறார்கள்? அப்படி ஒருவனுக்குத் தண்டனை தருவதை காந்திய வழி ஏற்றுக்கொள்ளுமா? எதற்காக காந்தி கொல்லப்பட்டார்?
1948-ம் வருடம் மே 27-ம் தேதி வழக்கு விசாரணை துவங்கியது. காந்தி கொல்லப்பட்ட இடத்திலேயே கோட்சே கைது செய்யப்பட்டு விட்டான். குற்றத்தை அவன் மறுக்கவும் இல்லை. கைப்பற்றபட்ட துப்பாக்கியில் மீதம் நான்கு குண்டுகள் இருந்தன, மீதி மூன்று காந்தி உடலில் பாய்ந்திருந்தன. ரகுநாத் நாயக் என்ற தோட்டக்காரன் கையில் புல்வெட்டும் கருவியோடு காந்தியின் வலது பக்கம் பத்தடி தள்ளி நின்று இருந்தான். யாரோ ஒருவன் துப்பாக்கியால் காந்தியை சுடுவதைக் கண்டதும் ரகுநாத் நாயக் கோபத்துடன் கோட்சேயை மூன்று முறை புல்வெட்டியால் தாக்கினான்.
அப்போது சார்ஜென்ட் தேவராஜ் சிங் ஓடி வந்து கோட்சேயைப் பிடித்துக்கொண்டான். கூட்டம் அவனை அடித்தே கொன்றுவிடக்கூடும் என்று பயந்து அவனைப் பாதுகாப்பாக பிடித்துத் தள்ளிக்கொண்டு போனார். காந்தி சுடப்படுவதை அருகில் இருந்து கண்ட சர்தார் குர்பாசான்சிங் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடியே நின்றார். கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்று நாதுராம் கோட்சே அறிவிக்கப்பட்டான். மற்றவர்களைத் தேடும் பணி துவங்கியது. தனிப் படை அமைக்கப்பட்டு, துரிதமாக விசாரணைகள் நடந்தேறின.
பிப்ரவரி 4-ம் தேதி பிர்லா இல்லத்திற்குச் சென்ற வாடகை காரைக் கண்டுபிடித்து டிரைவர் சுர்ஜித் சிங்கைக் கைது செய்தது போலீஸ். சங்கர் கிருஷ்டய்யா, சாவர்க்கர், நாராயண் ஆப்தே ஆகியோர் கைதானார்கள். ஆப்தே டெல்லியில் உள்ள இந்து மகாசபையின் பின் உள்ள காட்டில் துப்பாக்கி சுட பயிற்சி அளித்த மரத்தை அடையாளம் காட்டினான்.  கோட்சே சுடப் பழகிய வீட்டின் உரிமையாளர்  டாக்டர் பார்ச்சர்  கைது செய்யப்பட்டார்.  ஒன்பது பேரைக் கொலையில் உடந்தையானவர்கள் என்று கைது செய்தார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி நகர்வாலா. எந்த அரசியல் குறுக்கீடும் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தான் இந்த விசாரணையைச் செய்வேன் என்று நகர்வலா கண்டிப்புடன் கூறியிருந்தார். அப்படியே நடந்தேறியது!
காந்தியின் உடலைப் பரிசோதனை செய்த இர்வின் மருத்துவமனை, சிவில் சர்ஜன் லெஃப்ட்டினென்ட் காலோனா தானேஜா, காந்தியின் உடலில் 1/4 x  1/6அளவு ஆழமான முட்டை வடிவத் துளை விழுந்த ஐந்து காயங்கள் இருந்ததைக் குறிப்பிட்டார். அவை, உடலைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளால் உருவானவை என்று உறுதி அளித்தார். காந்தியைச் சுட்ட துப்பாக்கியின் எண் 606824.
வழக்கு விசாரணை நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடம், செங்கோட்டையில் மொகலாய மாமன்னர் ஷாஜகான் நீதி வழங்கிய இடத்தின் ஒரு பகுதி. 100 அடி நீளமும் 23 அடி அகலமும் கொண்டது. முதல் மாடியில் இருந்தது. நீதிமன்றத்தின் ஒரு கோடியில் நீதிபதிக்கான தனிமேடை அமைக்கப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆத்மசரண்,  கான்பூரின் மாவட்ட நீதிபதியாகவும் செஷன்ஸ் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
முதல் நாள் சரியாக காலை 10 மணிக்கு நீதிபதி பக்கவாட்டுக் கதவு வழியாக நீதிமன்றத்தினுள் நுழைந்து தனது இருக்கையில் அமர்ந்தார். குற்றவாளிகள் ஒரே அணியாகக் கூண்டுக்குள் கொண்டுவரப்பட்டனர், நகர்வாலா தனது குற்றப் பத்திரிக்கையைத் தாக்கல் செய்தார்.
ஒன்பது குற்றவாளிகளும் மூன்று வரிசையில் அமர்ந்​திருந்தனர், சாவர்க்கர் மட்டுமே அதில் மிகுந்த சோர்வாகக் காணப்பட்டார். மற்றவர்கள் தங்களுக்குள்ளாக சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜூன் 24-ம் தேதி விரிவான விசாரணை ஆரம்பமாகி, நவம்பர் 6-ம் தேதி வரை நடைபெற்றது. அரசுத் தரப்பில் 149 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். 720 பக்க ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டன, வழக்கிற்குத் துணை சேர்க்கும்படியாக 404 ஆவணங்களும், 80 தடயப் பொருட்களும் நீதிமன்றத்தின் முன்வைக்கப்பட்டன. 160 பக்கம் குற்றவாளிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 297 பக்க எழுத்துபூர்வமான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஏழு புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் வழக்கில் பங்கேற்றனர்.
கார்க்கரேக்கு மராத்தியும், சங்கருக்கு தெலுங்கும், மதன்லாலுக்கு இந்தியும் தெரிந்திருந்த காரணத்தால், வழக்கு விசாரணையில் மொழிப் பிரச்னை ஏற்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் சி.கே.தப்தரி வழக்கை நடத்தினார்.எதிர்த் தரப்பில் எல்.பி. போப்பட்கர் முக்கிய வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவரோடு 15 முக்கிய வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்காக ஆஜர் ஆனார்கள்.
கோட்சே தனது அறிக்கையை கோர்ட்டில் வாசித்தான். அது 93 பக்கங்கள்கொண்டது. 35 ஆயிரம் சொற்கள் அதில் இருந்தன. அந்த அறிக்கையில் தன்னை ஒரு வீரப் புருஷனைப் போல அவன் காட்டிக்கொண்டான்.
1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் நாள் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, விரிவான 204 பக்கத் தீர்ப்பு அது. அந்தத் தீர்ப்பில் காந்தி போன்ற அஹிம்சாவாதியைக்கூட ஒருவன் கொன்றுவிட்டுத் தண்டனையில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே, கோட்சேவுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
நீதியின் செயல்பாடு, இந்திய சமூகத்தில் அறத்தின் முக்கியத்துவம் என்று நீதியரசர் ஆத்மசரண் முன்னுதாரணமான ஒரு தீர்ப்பை எழுதினார். அந்தத் தீர்ப்பில் இந்தியப் பிரிவினையில் இருந்து எப்படி காந்தியைக் கொல்லும் சதிச் செயல் விதை ஊன்றப்பட்டது என்பதில் துவங்கி, காந்தியைக் கொன்றவர்களின் அரசியல் பின்புலம் வரை அத்தனையும் கவனமாக விவரிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணையில் அரசு குறுக்கிடவே இல்லை. குற்றவாளிகளுக்கும் முறையான சட்ட உதவிகள் கிடைத்தன. இந்த வழக்கின் மேல் முறையீடு கிழக்கு பஞ்சாப் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதியரசர் ஹர்னாம் சிங் அதை விசாரித்தார். கோட்சே தானே கோர்டில் வாதாட முன்வந்தான். சொந்தச் செலவில் வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, அரசே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தந்தது.
பஞ்சாப் உயர் நீதிமன்றக் கோடைக் கால விசாரணை சிம்லாவில் நடைபெற்றது. கோர்ட்டிற்குக் கொண்டுவரப்படும் நாதுராம் கோட்சேயைக் காண மக்கள் பெருமளவு திரண்டுவிட்டதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
நீதிபதிகள் குழுவில் நீதிபதி பண்டாரி, நீதிபதி அச்சுருராம் நீதிபதி கோஷ்லா ஆகிய மூவர் இடம் பெற்று இருந்தார்கள், அவர்களும் மறுமுறையீட்டினை நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தனர்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய இரவில் கோட்சே இருந்த சிறை வளாகத்திற்குள் இரண்டு பேர் ரகசியமாக சுவர் ஏறிக் குதித்தனர். அதை, காவலாளி பார்த்துக் கூச்சலிட்டான். அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து வந்த இரண்டு பத்திரிக்கையாளர்கள் என்பது தெரிய வந்தது. தங்கள் உயிரைப் பணயம்வைத்து அவர்கள் குற்றவாளிகளைப் பேட்டி காண சிறைக்குள் புகுந்த விவரம் தெரிய வந்தது.முடிவில், கோட்சே தூக்கிலிடப்பட்டான். இறந்த உடலை வெளியே கொண்டுசெல்ல அரசு அனுமதிக்கவில்லை. ஆகவே, சிறைக்குள்ளேயே தகனம் செய்யப்பட்டது. கோட்சேவின் சாம்பல், காகர் என்ற சிறிய ஆற்றில் கரைக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கு அத்தோடு முடிந்து போனது.
இந்த வழக்கு சுட்டும் உண்மைகள்தான் வரலாற்றின் கசப்பான நிஜங்கள். பிரிவினையின் பெயரால் நடைபெற்ற வன்முறைகளுக்கு உண்மையில் யார் காரணம்? காந்தி போன்ற மகானைக் கொல்லும் மனநிலை எப்படி உருவாகிறது? காந்தி கொல்லப்படக்கூடும் என்று முன் உணர்ந்திருந்த உள்துறை அமைச்சகம் ஏன் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாமல் போனது? காந்தியை கொன்றது ஒரு முஸ்லீமாகத்தான்  இருக்கக்கூடும் என்ற கசப்பு உணர்வில் நிறைய வன்முறைகள் நடைபெற்றன, அந்த துவேசத்தின் விதை  எப்படி உருவானது? அதுதான் இன்றும் முற்றி வளர்ந்திருக்கிறது இல்லையா?
அதே நேரம் நீதி விசாரணைக்குள் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. சுதந்திரமாக நேர்மையாக அது நடைபெற வேண்டும் என்பதையும் காந்தி விசாரணை முன்உதாரணமாகக் காட்டுகிறது. அது போன்ற அறத்தை ஏன் நாம் இன்று இழந்துவிட்டோம்?