
![]()
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள்.
'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே, ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால், 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல், எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா?
ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார், ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான்காம்
| |
உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல், வில்கொண்டு போரிடுவார்கள். ஏனெனில், அணு ஆயுதங்களால் இந்த உலகம் அழிந்து, அதன் பிறகு மீண்டும் ஒரு பெருவெடிப்பின் மூலம் உலகம் என்ற ஒன்று உருவானால், அப்போது மனிதர்கள் இப்படித்தான் போரிடுவார்கள்!'' என்றாராம்.
தோழர்களே... தூற்றவும், போற்றவும் ஆள் இல்லாத ஒரு தேசத்தில், ஆயுதங்களை வைத்துக்கொண்டு 'நாம் வல்லரசு’ என்று கூக்குரல் இடுவதில் என்ன இறுமாப்பு இருக்கிறது?
அணுப் பொருளாதாரம், வேறு எந்தப் பொருளாதாரத்தைக் காட்டிலும் இன்று மிகச் சூடான உரையாடல்களைக் கொண்டுள்ள விஷயம். 'தாங்கள்தான் பொருளாதாரத்தின் போக்கையே தீர்மானிப்பவர்கள்’ என்று காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும், சில மேட்டுக்குடி அறிவுஜீவிகளும், அணுப் பொருளாதாரம் என்பதை அணு அரசியலாக மாற்றி இருக்கிறார்கள். இன்று வரையிலும் கணக்கு வழக்கு, லாப - நட்டம் காட்ட முடியாத துறை என ஒன்று இருந்தால், அது அணு சக்தித் துறை மட்டும்தான்!
எந்த ஒரு வெளிப்படைத் தன்மையும் இல்லாமல், அமெரிக்காவுக்கு வேலை செய்கிறோமா அல்லது இந்தியாவுக்கா என்றே தெரியாமல் இயங்கி வரும் ஒரே அரசுத் துறையும் இதுதான்!
'உலகின் அடுத்த வல்லாதிக்க அரசுகளாக சீனாவும் இந்தியாவும்தான் இருக்கும்’ என்று கணிக்கிறார்கள். எதை வைத்து?
'இந்தியாவிடம் 100 அணுகுண்டுகள் இருக்கின்றன. சீனாவிடமோ 1,000 அணுகுண்டுகள் இருக்கின்றன. என்னிடமோ வெறும் 500 அணுகுண்டுகள்தான்! சீனாவை வளரவிட்டால், அவன் நம் குடுமியைப் பிடிப்பான். சீனாவுடன் இந்தியா கைகோத்தாலும், உலக நாட்டாமையான எனக்கு ஆபத்துதான். மூச்சுத் திணறும் வர்த்தகப் போட்டியில் சறுக்கினாலும் முதலாளித்துவத்தை, சீனன் உள்ளே அனுமதிக்க மாட்டான். மூச்சுத் திணறிச் செத்தாலும், இந்தியன், முதலாளித்துவத்தின் காலை விட மாட்டான். 'வல்லரசாக்குகிறோம் உங்களை’ என்று சொல்லி அவன் வறுமையை நாம் பயன்படுத்திக்கொள்வோம்’ என்று அமெரிக்கா சிந்தித்ததன் விளைவுதான் அணு ஒப்பந்தம்.
இப்படி எல்லைப் பிரச்னை முதற்கொண்டு போட்டி நாடான சீனாவுக்கும் நமக்கும் இடையே பள்ளம் பறித்து, திரி கிள்ளி யார் மாட்டிக்கொண்டாலும், 'ஒரு எதிரி முடிந்தான்’ என்று கொக்கரித்துக் கொண்டாடக் காத்திருக்கிறது வல்லாதிக்கம். அதன் பிறகு 'எதிரிக்கு எதிரி நண்பன்’ என்று முதுகுக்குப் பின்னால் கத்தியை வைத்துக்கொண்டு அமெரிக்காவும் சீனாவுமோ அல்லது அமெரிக்காவும் இந்தியாவுமோ கட்டித் தழுவிக்கொள்ளும். முதுகுக்குப் பின்னால் குத்தும் பழக்கம் நம்மிடம் இல்லை என்பதால், அமெரிக்காவிடமும் சீனாவிடமும் நாம் மார்பு காட்டி நிற்போம். எனவே, அபாயச் சங்கு அணு ஒப்பந்த வடிவத்தில் ஊதப்பட்டுவிட்டது!
'மக்கள் பாடையில் போனால்தான் என்ன, பட்டினி கிடந்தால்தான் என்ன? நமக்கு பென்ஸ் காரும், பசிக்கு கேக்கும் இருக்கிறது’ என்கிற நிலைப்பாட்டில்தான் அரசியல் கட்சிகள் இந்த அணு விஷயத்தில் இயங்கி வருகின்றன. 'அணு... அதன் பாதிப்பு என்ன?’ என்பதில் துளியேனும் அக்கறை காட்டப்பட்டு இருந்தால், இன்று இத்தனை அணுமின் நிலையங்கள் இந்தியாவில் தோன்றி இருக்காது.
கனிமொழி தனது நாடாளுமன்ற உரையில் அணுமின் நிலையங்களின் தேவையைப்பற்றி, அதன் அடிப்படை அறிவுகூட இல்லாமல் பேசி இருந்தார். அவரின் உரை 'காலச்சுவடு’ இதழில் வெளியாகி இருந்தது. அதற்கு எதிர் வினையாக, அணு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அந்தக் கடுப்பில், அரசு நூலகங்களுக்கான 'காலச்சுவடு’ இதழ் சந்தாவை நிறுத்திவிட்டார்கள். சந்தா நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று சொல்லப் படவில்லை. 'இதுவாகவும் இருக்கலாம்’ என்பது என் சுய அனுமானம். அதாவது, அணு... அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டு உள்ளது!
ஜப்பான், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளின் அரசியல் எப்படி அணுவால் தீர்மானிக்கப்படுகிறதோ, அது போன்றதொரு நிலை இந்தியாவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. வல்லாதிக்கங்களிடம் இருந்து பணம் வாங்கிவிட்டு, அரசியல்வாதிகள் விலைபோய் விடுவார்கள். அவர்கள் அனுமதித்த அணு மின் நிலையங்களை, ஏன் அணு சக்தித் துறையையே இயக்குவது டாடா, பிர்லாக்களாகத்தான் இருப்பார்கள்.
அணு விஷயத்தில் அரசியல் இவ்வாறு சீர்குலைந்து கிடக்க, நம் அறிவியலாவது அறிவுபூர்வமானதாக இருக்கிறதா என்றால், அதுவும் கேள்விக்குறியே!
இந்தியாவின் ஒட்டுமொத்தக் கடற்கரையின் நீளம் 7,500 கி.மீ. சுனாமியின்போது, குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை உள்ள கடலோர மாநிலங்களில், ஒன்று மட்டுமே கடுமையாக பாதிக்கப்பட்டது, அது தமிழகம். அதிலும், 13 கடலோர மாவட்டங்கள் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாயின. பாதிக்கப்பட்ட கிராமங்களிலேயே நம் அரசு இயந்திரத்தால் மறுவாழ்வு நடவடிக்கை ஒன்றைக்கூட முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. அதற்கும் வெளிநாட்டு ஏஜென்ஸிகள்தான் வரவேண்டி இருக்கிறது. மன்மோகன் சிங்கும், ஜெயலலிதாவும் சவேரியர் கோயிலில் நின்றுகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதே போல் தமிழ் நாட்டில் வெள்ள நிவாரணப் பணியின்போது, உதவிப் பொருட்களை வாங்கப் போய், அந்த நெரிசலில் 42 பேர் உயிர் இழந்தார்கள். இது நம்மிடையே உள்ள பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்பு உணர்வுக்கு ஓர் உதாரணம்!
அதே சமயம், 'நம் நாட்டில் உள்ள பல விமானிகள் கள்ளச் சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்தவர்கள்’ என்கிற அதிர்ச்சிகரமான தகவலை நான் விமானத்தில் சென்றுகொண்டு இருந்தபோது படித்தேன். நம் மக்களின் பாதுகாப்பைப்பற்றி நாம்கொண்டுள்ள அறிவு இவ்வளவுதானா?
சமீபத்தில் நான் சீனா சென்றிருந்தேன். ஜப்பானில் ஏற்பட்ட அணு விபத்துக்குப் பிறகு, அடுத்த பத்தே நாட்களில் சீனாவில் ஒரு மாநாடு ஒன்றைக் கூட்டுகிறார்கள். சீனாவுக்கும் உதயகுமாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழகத்தின் கடைக்கோடியான நாகர்கோவிலில் இருக்கும் என்னை சீனாவுக்கு அழைத்து, சூரிய ஒளி ஆற்றல் பற்றிப் பேசச் சொல்கிறார்கள். அந்த மாநாட்டில் அணு தவிர்த்து, புதிய ஆற்றல் ஒன்றைக் கண்டுபிடிப்பதற்கான வாத, விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. இன்னும் ஐந்து வருடங்களில் நம்மிடம் இருக்கும் சூரிய ஒளி ஆற்றல் சந்தையை அவர்கள் எடுத்துக்கொள்ளப் போகிறார்கள்.
ஒரு நாட்டில் ஆபத்து ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் அதே ஆபத்தைத் தடுக்கும் முன்னேற்பாடுகளைச் செய்யும் அவர்கள் வல்லரசு ஆவார்களா? அல்லது 'இந்தோனேஷியாவில் சுனாமி தாக்கி 5 மணி நேரத்துக்குப் பிறகு இந்தியாவில் சுனாமி ஏற்படும்’ என்பது தெரிந்தும்... நடவடிக்கை எடுக்காத நாம் இந்த உலகத்துக்குத் தலைமையேற்கப் போகிறோமா?
காற்றில் கலந்திருக்கும் 4 சதவிகிதக் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த 48,000 வருடங்கள் உயிர்ப்புடன் இருக்கும் கதிரியக்கம் கொண்டுள்ள அணு மின் நிலையங்கள் தேவைதானா? 40 வருடங்கள் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, எத்தனையோ தலைமுறைகளை அழிக்க நமக்கு யார் உரிமை தந்தது?!
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடகாவின் கைகா என்கிற இடத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் தீ விபத்து நடந்தது. அந்த நிலையத்தின் இயக்குநர் குப்தா, 'ஆபத்தாக எதுவும் நடக்கவில்லை’ என்று செய்திகளில் சொல்கிறார். ஆனால், 'விபத்து ஏற்பட்டது உண்மையா இல்லையா? அது எவ்வாறு ஏற்பட்டது? அதை எப்படி அணைத்தீர்கள்?’ என்பன போன்ற கேள்விகளைக் கேட்பதற்கும்கூட நமக்கு உரிமை மறுக்கப்படுகிறது!
சமீபத்தில் பீகாரில் நிதிஷ்குமார், அங்கு உள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஐந்தாம் வகுப்புத் தேர்வு ஒன்றை நடத்தினார். அதில் 8,000 பேர் தோல்வி. இந்த லட்சணத்தில் இருக்கும் ஆசிரியர்களால், அடிப்படை அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டால், குழந்தைகளுக்கு எவ்வாறு அறிவியல் ஆர்வம் வரும்... வளரும்? 'நான் என்னவாகப் போகிறேன்?’ என்றே தெரியாமல், பணம் சம்பாதிக்கலாம் என்கிற 'பாப்புலர் கல்ச்சர்’கொண்டு வளரும் தலைமுறை இன்னொரு பக்கம்... ஆக, முறையான கல்வித் தலைமையும் நம்மிடம் கிடையாது.
இத்தனைக்குப் பிறகும் நாம் ஏன் வல்லரசாக விரும்புகிறோம்? காலனி ஆதிக்கக் காலத்தில் இருந்து வருகிற தாழ்வு மனப்பான்மைதான் இதற்குக் காரணம். 'அமெரிக்காவிடம் உள்ளதுபோல அணு ஆயுதங்கள் நம்மிடம் இருந்தால், நாமும் நாட்டாமை செய்யலாம்’ என்கிற நினைப்புதான் வல்லாதிக்கம் பெறுவதற்கான அடிப்படை.
சரி, அப்படியே வல்லரசு ஆகித்தான் நாம் என்ன செய்யப்போகிறோம்? குளங்களை வெட்டி குடிமராமத்து செய்து வாழ்ந்தோமே... அது வளர்ச்சியா? அல்லது குளங்களை மூடிவிட்டு, அதன் மேல் பாலங்கள் கட்டுகிறோமே... இது வளர்ச்சியா?
மீண்டும் ஒரு முறை மேலே உள்ளக் குறளைப் படியுங்கள். வளர்ச்சி என்பது விகிதங்கள் சொல்வதில் இல்லை. வறுமையைப் போக்குவதில் இருக்கிறது. பண வெறி பிடித்த முதலாளிகள், தன்னலம் மட்டுமே கருதக்கூடிய விஞ்ஞானிகள், மக்கள் மத்தியில் உண்மைகளைச் சொல்லாமல் ரகசியத்தன்மை வாய்ந்த அரசியல்... இவை மூன்றும்தான் ஒரு நாட்டுக்கு ஆபத்து. இந்தக் கட்டுமானத்தை உடைப்பதுவே இந்தத் தொடரின் நோக்கம். நம் அனைவரின் நோக்கமாகவும் இது மலரட்டும். இந்தக் கட்டுடைப்பில் நீங்களும் பங்கேற்கலாம்.
எப்படி?!
- அதிரும்...
யார் இந்த உதய குமாரன்?
இந்தியாவில் அணு சக்திக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், சுப.உதயகுமாரன் அங்கே
இருப்பார். நாகர்கோவில்காரர். இளநிலை கணிதம், முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எத்தியோப்பியாவில் ஆறு வருடங்கள் பள்ளி ஆசிரியராக இருந்தார். பிறகு, அமெரிக்காவின் நாடர் டேம் பல்கலைக்கழகத்தில் அமைதிக் கல்வியில் முதுகலைப் பட்டமும், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இவரின் தந்தை அரசியலில் ஆர்வம்கொண்டவர். இவரின் தாய், சமூகப் பணியாளராக இருந்தவர். அந்த உந்துதலினால், அரசியலுக்காகவும், மக்களுக்கான அறிவியலைக் கொண்டுசெல்லவும் பல விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்.
இவர் அணு சக்திக்கு எதிராகப் போராட தனிப்பட்ட ஒரு காரணமும் உண்டு. இவரின் தாத்தா, பாட்டி நால்வரில் மூன்று பேர் புற்றுநோய் தாக்கி இறந்தனர். அதற்குக் காரணம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணல் போன்ற கனிமங்களில்இயற்கைக் கதிர் வீச்சு அதிகமாக இருப்பது. அதைத் தனியார் நிறுவனங்கள் அதிகமாகச் சுரண்டச் சுரண்ட... அங்கே இருந்த மக்களுக்குப் புற்றுநோய் அதிகம் கண்டது. அந்தச் சுரண்டல் இப்போதும் தொடர்கிறது. கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை, கன்னியாகுமரி முதல் ஆலப்புழா வரையில் உள்ளவர்களுக்கு அதிகமான அளவில் புற்று நோய் உள்ளது!
களப் பணியில் மட்டும் இன்றி, இவரை அணு சக்திக்கு எதிராக எழுதவும் ஊக்கம் தந்த இவரின் பேராசிரியர் எபினேசர் பால்ராஜும் புற்றுநோயால் இறந்தார். எனவே, 'புற்றுநோய் கல்வி’ என்கிற புத்தகத்தை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறார் சுப.உதயகுமாரன்.
'தி கூடங்குளம் ஹேண்ட் புக்’, 'கான்ஃப்ரன்டேஷன்ஸ் ஆஃப் டிசாஸ்டர்’, 'கிரீன் பொலிட்டிக்ஸ் இன் இண்டியா’ புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். 'அசுரச் சிந்தனைகள்’ நூலின் தொகுப்பாசிரியர். அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளின் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலுமாகப் பல்வேறு இதழ்களில் அணு சக்திக்கு எதிரான பதிவுகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். சமாதானம் மற்றும் சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தும் கல்விச் சாலை ஒன்றினை, மனைவியுடன் இணைந்து நாகர்கோவிலில் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் சமூகப் பணி என்கிற தளத்தில் முன்னோடியாக இருப்பவர்களில் ஒருவரான ஒய்.டேவிட் தலைமையில், நாட்டின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அணு சக்திக்கு எதிரான இயக்கங்களை ஒன்று திரட்டி 2009-ல், 'அணு சக்திக்கு எதிரான இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு’ உருவாக்கப்பட்டது. தற்போது அதன் தலைவராகஇருந்து, சுற்றுச்சூழலுக்காகவும் சக மனித நலனுக்காகவும் போராடி வருகிறார் நம் உதயகுமாரன்!
படம்: எம்.ராம்குமார்





பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜாகீர்கான் தான் சூப்பர் ஸ்டார். இந்தியாவின் பௌலிங் அட்டாக்கை ஒன் மேன் ஆர்மியாக நின்று தோளில் சுமந்தவர் ஜாகீர்கான். 9 போட்டிகளில் 21 விக்கெட்டுகள் எடுத்து, உலகக் கோப்பைத் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் ஐந்து ஓவர்களில் மூன்று ஓவர்கள் ரன் ஏதும் கொடுக்காமல் பந்து வீசியதோடு, உபுல் தரங்காவின் விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கையைக் கட்டுப்படுத்தி வெற்றிக்கு வழிவகுத்தார் ஜாகீர்கான்!



















